புதிய ரேவா என்எக்ஸ்ஆர், ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக்- தகவல்கள்
கார்கள் வெளியிடும் கார்பன் புகையால் சுற்றுப்புற சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை மணியடித்து வருகின்றனர். இதனால், சுற்றுச் சூழலுக்கு தீங்கு அதிகம் விளைவிக்காத பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் உலகின் பெரும்பாலான கார் நிறுவனங்கள் சிரத்தையுடன் செயல்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் மரபு சார்ந்த எரிபொருள்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலையும் ஏற்படும் என்பதும் எலக்ட்ரிக் தொழில்நுட்பத்தின் மீது கார் நிறுவனங்கள் தீவிரம் காட்டுவதற்கு முக்கிய காரணம். தற்போது விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் கார்கள் அதிக விலை கொண்டதாக இருப்பதும், அதிக தூரம் செல்ல முடியாது என்பதும், பெட்ரோல் பங்குகள் இருப்பது போன்று எலக்ட்ரிக் கார்களுக்கு குறிப்பிட்ட தூரங்களில் சார்ஜிங் பாயிண்ட்கள் இல்லாதது ஆகிய காரணங்கள் எலக்ட்ரிக் கார்களை நம்பி வாங்க வாடிக்கையாளர்கள் முன்வர மறுக்கின்றனர்.
இருப்பினும், இந்தியாவில் ரேவா நிறுவனம் மட்டுமே எலக்ட்ரிக் காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆனால், அந்த கார் பொம்மை தோற்றம் கொண்டதாகவும், 2 பேர் மட்டுமே பயணிக்க முடியும், ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 45 கிமீ தூரம் வரை செல்ல முடியும் என்பதும் ரேவா எலக்ட்ரிக் கார் எடுபடாததற்கு காரணங்கள். இந்த குறைகளை களைந்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களுடன் 4 பேர் செல்லும் வசதியுடன் புதிய எலக்ட்ரிக் காரை ரேவா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ரேவா என்எக்ஸ்ஆர்:
பொம்மை தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட காராக வருகிறது ரேவா என்எக்ஸ்ஆர். பக்கவாட்டில் 2 கதவுகள் பின்புறத்தில் ஒரு கதவுடன் ஒரு ஹேட்ச்பேக் கார் தோற்றத்தை வழங்கும் ரேவா என்எக்ஸ்ஆர் காரில் இருக்கும் 2 வரிசை இருக்கையில் 4 பேர் அமர்ந்து செல்ல முடியும். மேலும், 2 வித பேட்டரி மாடல்களில் இந்த புதிய எலக்ட்ரிக் கார் கிடைக்கும்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் செல்லும் திறன் வாய்ந்த லெட் ஆசிட் பேட்டரி மற்றும் 160 கிமீ தூரம் பயணிக்க கூடிய லித்தியம் அயான் பேட்டரி மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. லெட் ஆசிட் பேட்டரி மாடல் மணிக்கு அதிகபட்சம் 80 கிமீ வேகத்திலும், லி்த்தியம் அயான் பேட்டரி மாடல் மணிக்கு அதிகபட்சம் 104 கிமீ வேகத்திலும் செல்லும். வரும் தீபாவளியின்போது இந்த பேட்டரி காரை விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திராவின் கீழ் இயங்கும் ரேவா திட்டமிட்டுள்ளது.
எதிர்பார்க்கும் விலை: ரூ.4.5 லட்சம்
ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக்:
தனக்கு பெயர் வாங்கி கொடுத்த ஃபியஸ்ட்டா செடான் காரின் ஹேட்ச்பேக் மாடலை களமிறக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. ஒரு முற்றிலும் மாறுபட்ட ரசனை கொண்ட வடிவமைப்புடன் வரும் இந்த ஹேட்ச்பேக் கார் ஹோண்டா ஜாஸ் காருக்கு இணையாக நிலை நிறுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வர ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.
தற்போது தமிழக சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் அதிக இடவசதி கொண்டதாக இருக்கும் என்பதால் தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தை பெறும் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்குள் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வர ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.
எதிர்பார்க்கும் விலை: ரூ.6 லட்சம்
டொயோட்டோ கேம்ரி:
தரம், வடிமைப்பு, வசதிகள் என அனைத்திலும் சிறந்த டொயோட்டோ கேம்ரியின் மேம்படுத்தப்பட்ட மாடல் விரைவில் வருகிறது. டொயோட்டோவின் சொகுசு பிராண்டான லெக்சஸ் கார்களின் வடிவமைப்பு சாயல், சாரம் கேம்ரியில் பிரதிபலிக்கிறது. ஒரு அறையில் உட்கார்ந்திருப்பது போன்ற இடவசதி நெஞ்சில் நிறையும் கார் என்ற பெருமையை புதிய கேம்ரியும் தொடர்ந்து தக்க வைக்கும்.
புதிய கேம்ரியில் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் 2.4 லிட்டர் எஞ்சினுக்கு பதிலாக புதிய 2.5 லிட்டர் எஞ்சினுடன் வருகிறது. இந்த எஞ்சின் 167 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மேலும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மாடல்களில் கிடைக்கும். இந்த காரை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய டொயோட்டோ திட்டமிட்டுள்ளதால், குறைந்த விலையில் வரும் என்பதால் இதன் ரக கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும்.
எதிர்பார்க்கும் விலை: ரூ.20 லட்சம்


Click it and Unblock the Notifications








