மீண்டும் தீப்பிடித்து எரிந்த நானோ கார்: மும்பையில் பரபரப்பு

உலகின் மிகக் குறைந்த விலை கார் என்ற பெருமையோடு வலம் வரும் நானோ கார் அடிக்கடி தீப்பிடித்து எரிந்து வரும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு அடிக்கடி நானோ கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. மேலும், அந்த காரின் விற்பனை கூட படுபதாளத்திற்கு சென்றது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய 2012 நானோ காரில் தீப்பிடிக்காத தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தி இருப்பதாக கூறி இந்த பிரச்னைக்கு டாடா முற்றுப்புள்ளி வைத்தது. கூடுதல் வசதிகளுடன் வந்ததால் தற்போது நானோவின் விற்பனை ஓரளவு ஏறுமுகத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், மும்பையின் புறநகர் பகுதியான கோரிகானில் கடந்த 10ந் தேதி நானோ கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த காரில் குழந்தை உட்பட 3 பேர் பயணித்துள்ளனர். ஆனால், இந்த விபத்திலிருந்து அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியதாக சம்வத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
நானோ கார் மீண்டும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டில் நானோ கார் தீப்பிடித்ததாக வெளிவரும் முதல் அதிகாரப்பூர்வ செய்தி இதுதான். ஆனால், இதுகுறித்து டாடா மோட்டார்ஸிடமிருந்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








