புதிய மாடல்களால் பிரயோஜனமில்லை.. நவம்பரில் கார் விற்பனையில் சரிவு

பொதுவாகவே செப்டம்பர்-நவம்பர் இடையிலான பண்டிகை காலத்தில் கார் விற்பனை ஏற்றம் பெறுவது வழக்கம். இதற்காக, புதிய மாடல்களை கார் நிறுவனங்கள் வரிசை கட்டின. ஆல்ட்டோ, செயில் யுவா, புதிய ஃபிகோ என புதிய மாடல்கள் வந்தும் கார் விற்பனையில் சரிவு கண்டிருக்கிறது.
இந்த ஆண்டு பண்டிகை காலம் கார் நிறுவனங்களின் கணிப்புகளை பொய்யாக்கிவிட்டது. செப்டம்பர்-நவம்பரில் மட்டும் கார் விற்பனை 3 விழுக்காடு சரிவு கண்டிருக்கிறது. நவம்பரில் 8.25 விழுக்காடு சரிவு ஏற்பட்டிருக்கிறது. மேலும், கார்களுக்கு 5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கியும் கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படவில்லை.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-நவம்பர் மாதங்களுக்கு இடையில் 17.52 லட்சம் கார்கள் விற்பனையாகி விற்பனையில் 9.62 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. யுட்டிலிட்டி கார்கள் மார்க்கெட் 61 விழுக்காடு வளர்ச்சி கண்டிருக்கிறது. தீபாவளியையொட்டிய பண்டிகை காலத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்பட்டிருந்தால் மட்டுமே இந்த ஆண்டு இலக்கை எட்டியிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என பல நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
மேலும், எரிபொருள் விலை உயர்வு, கார் கடன் வட்டி உயர்வு உள்ளிட்டவைதான் கார் மார்க்கெட் வளர்ச்சியில் பெரிய தடைக்கற்களாக மாறியிருப்பதாக ஹூண்டாய் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைப் பிரிவு தலைவர் ராகேஷ் வத்சவா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








