2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகன காப்பீடு: ஐஆர்டிஏ.,வின் புதிய திட்டம்

அதிக இழப்பீடு வழங்க வேண்டியிருப்பதால் வாகனங்களுக்கு காப்பீடு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ள காப்பீட்டு நிறுவனங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, வாகன காப்பீட்டுக்கான பிரிமியத்தை உயர்த்துவதற்கு அனுமதிக்குமாறு ஐஆர்டிஏ அமைப்பிடம் காப்பீடு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில், வாகன காப்பீட்டு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தவிர்க்கவும், அதேவேளை வாடிக்கையாளர்களுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது குறித்து ஐஆர்டிஏ அமைப்பு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
வாகனங்களுக்கான காப்பீட்டை தற்போது ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் நடைமுறை இருக்கிறது. இதனை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் திட்டத்தை அமல்படுத்த ஐஆர்டிஏ திட்டமிட்டுள்ளது. தனிநபர் மற்றும் வர்த்தக வாகனங்கள் அனைத்திற்கும் இந்த புதிய நடைமுறையை கொண்டு வருவதற்கு ஐஆர்டிஏ திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், வாகன காப்பீட்டுக்கான பிரிமியம் குறைய வாய்ப்பு ஏற்படும். ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிப்பதால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் நடைமுறை சிரமங்களும் தவிர்க்கப்படும்.
இரண்டு ஆண்டுகளுக்கான பிரிமியம் தொகையை வாடிக்கையாளர்களிடம் இருந்து முன்கூட்டியே பெறுவதன் மூலம் வாகன காப்பீட்டு சேவை வழங்கும் நிறுவனங்களின் நிதி ஆதாரம் வலுவடையும் என்று ஐஆர்டிஏ கருதுகிறது. ஆனால், இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதால் வாகன காப்பீட்டில் புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது குறித்து புதிய குழு ஒன்றை காப்பீட்டு நிறுவனங்கள் அமைத்து தீர்வுகளை தருமாறு ஐஆர்டிஏ கேட்டுக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








