கார் உற்பத்தியை கூட்டுவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்திய மாருதி

விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாருதி சிஓஓ சித்திக் கார் உற்பத்தியை அதிகரிக்கவும், காத்திருப்பு காலத்தை குறைக்கவும் பல புதிய நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,"தற்போது 40 சதவீத மார்க்கெட் பங்களிப்பை வைத்திருக்கிறோம். இதனை 45 விழுக்காடாக உயர்த்துவதற்கு இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறோம்.
இந்த இலக்கை எட்டுவதற்கு ஏதுவாக குஜராத் ஆலை திட்டத்தையும் விரைவுப்படுத்தியுள்ளோம். இந்த புதிய ஆலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. கூடிய விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட உள்ளது.
ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமைய இருக்கும் இந்த புதிய ஆலையை படிப்படியாக ஆண்டுக்கு 18 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக மாற்ற திட்டம் வைத்துள்ளோம்.
இதுதவிர, பெங்களூர், நாக்பூர், ராஞ்சி மற்றும் சிலிகுரி ஆகிய இடங்களில் கார்களை இருப்பு வைப்பதற்கு ஸ்டாக்யார்டுகளை அமைத்துள்ளோம். மேலும், ஒரு புதிய ஸ்டாக்யார்டுக்கு இடம் தேர்வு செய்யப்படும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்மூலம், காத்திருப்பு காலத்தை வெகுவாக குறைக்க முடியும்.
மேலும், மானேசர் ஆலை முழு உற்பத்தி திறனை எட்டிவிட்டது. அங்கு தற்போது எந்த பிரச்னையும் இல்லை. எனவே, அடுத்த ஓரிரு மாதங்களில் புக்கிங் நெருக்கடி முழுமையாக தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications








