ஸ்விப்ட் கதையாகும் எர்டிகா: 6 மாதங்களுக்கு மேல் காத்திருக்கணும்?
எகிடுதகிடான புக்கிங் காரணமாக ஸ்விப்ட் போன்றே டீசல் எர்டிகாவுக்கும் 6 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
கடந்த மாதம் 7 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட புத்தம் புதிய எர்டிகா எம்பிவி காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வந்தது. ரூ.5.89 லட்சம் ஆரம்ப விலையில் பெட்ரோல் மாடலும், ரூ.7.30 லட்சம் விலையில் டீசல் மாடலும் விற்பனைக்கு வந்ததால், வாடிக்கையாளர்கள் முண்டியடித்து எர்டிகாவை புக்கிங் செய்து வருகின்றனர்.

அறிமுகம் செய்யப்பட்டு ஒன்றரை மாதங்கள் நெருங்கி வரும் நிலையில், 40,000 எர்டிகா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், மாதத்திற்கு அதிகபட்சம் 6,000 எர்டிகா கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் மாருதியிடம் உள்ளது.
இதனால், தற்போது எர்டிகா டீசல் காருக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்களுக்கு மேல் நீளும் சூழ்நிலை எழுந்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விப்ட் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது.
அறிமுகம் செய்யப்பட்டு ஒரு சில மாதங்களில் ஒரு லட்சத்துக்கு மேல் புக்கிங் ஆனது. ஆனால், தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் ஸ்விப்ட் காருக்கான காத்திருப்பு காலம் 8 மாதங்கள் வரை நீண்டது. தற்போதுதான், ஸ்விப்ட் பாரத்தை ஓரளவு இறக்கியுள்ளது மாருதி.
இந்த நிலையில், எர்டிகாவால் மாருதிக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காத்திருப்பு காலம் நீளும் சூழ்நிலை ஏற்பட்டால், அது நிச்சயம் வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும். இது டொயோட்டோ இன்னோவா, மஹிந்திரா ஸைலோ ஆகிய போட்டியாளர்களுக்கு சாதகத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications