பிரிமியம் கார் தயாரிக்கும் எண்ணம் இல்லை: மாருதி

சிறிய கார் மார்க்கெட்டில் மாருதி மிகப்பெரிய பங்களிப்பை கொண்டிருக்கிறது. குறைந்த விலை, நிறைவான மைலேஜ், சிறந்த சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் விலை குறைவு என அனைத்திலும் மாருதி மக்களிடம் மிகுந்த நம்பிக்கையையும், வரவேற்பையும் பெற்ற பிராண்டாக திகழ்கிறது.
ஆனால், அந்த நிறுவனம் அறிமுகம் செய்த கிசாஷி பிரிமியம் செடானுக்கு போதிய வரவேற்பு இல்லை. இதனால், கிசாஷி விற்பனையை நிறுத்த மாருதி முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், மாருதியின் எதிர்கால வர்த்தக கொள்கைகள் குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்," இந்திய மார்க்கெட்டில் சிறிய கார்கள் வலுவான சந்தையை கொண்டிருக்கின்றன. எனவே, எதிர்காலத்தில் பிரிமியம் கார் தயாரிப்பில் இறங்கும் பேச்சுக்கே இடமில்லை. எதிர்காலத்தில் சிறிய கார் சந்தையின் மீதே முழு கவனத்தையும் செலுத்த இருக்கிறோம்," என்றார்.
பல்வேறு நாடுகளுக்கு கார்களை மாருதி ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில், நிசான் டட்சனை போன்று ஆசிய, ஆப்ரிக்க சந்தைகளில் மாருதி பிராண்டில் குறைந்த விலை கார்களை நேரடியாக அறிமுகப்படுத்த அதன் தாய் நிறுவனமான சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதனால், உலக அளவில் மாருதியின் பங்களிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








