10 பேர் செல்லும் வசதியுடன் புதிய எம்யூவி கார்: சோனாலிகா அறிமுகம்

இன்டர்நேஷனல் கார்ஸ் அண்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சோனாலிகா செயல்பட்டு வருகிறது. டிராக்டர் வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் சோனாலிகா பயணிகள் வாகன விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது.
விற்பனை நிறுத்தப்பட்ட டொயோட்டா குவாலிஸ் போன்றே அச்சு அசலான ரைனோ என்ற மல்டி யுட்டிலிட்டி(எம்யூவி) ரகத்தை சேர்ந்த காரை அந்த நிறுவனம் விற்பனை செய்து வந்தது. ஆனால், விற்பனையில் அந்த கார் பெரிய அளவில் சாதிக்கவில்லை.
இந்த நிலையில், எக்ஸ்டீரிம் என்ற பெயரில் புதிய எம்யூவி ரக காரை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த புதிய கார் வடிவமைப்பில் ரைனோ போன்றேதான் இருக்கிறது. 10 பேர் செல்லும் வசதியுடன் வர்த்தக மார்க்கெட்டை கணக்கில்கொண்டும், 7 பேர் செல்லும் வசதியுடன் வந்துள்ள மாடல் கூடுதல் சொகுசு அம்சங்களுடன் தனிநபர் பயன்பாட்டு பிரிவை கருத்தில்கொண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய கார் 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்திருக்கிறது. எல்டி, எல்டி ஏசி, எஸ்டி, மற்றும் விடி ஆகிய வேரியண்ட்களில் வசதிகளை பொறுத்து விற்பனைக்கு வந்திருக்கிறது. புதிய எக்ஸ்டீரிமில் 99 பிஎச்பி மற்றும் 120 பிஎச்பியை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இரண்டு விதமான டீசல் எஞ்சின்களில் கிடைக்கும்.
செவர்லே தவேரா நியோ3 காரில் பொருத்தப்பட்டிருக்கும் சிஆர்டிஐ எஞ்சின்தான் இதிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பில் சில மாறுதல்களுடன் வந்திருக்கும் புதிய எக்ஸ்டீரிம் வாடிக்கையாளர்களிடம் நிச்சயம் வரவேற்பை பெறும் என சோனாலிகா தெரிவித்துள்ளது.
முதலாவதாக ஐதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய கார் தென் இந்தியாவில் மட்டுமே தற்போது கிடைக்கும். படிப்படியாக வட இந்திய மார்க்கெட்டிலும் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று சோனாலிகா தெரிவித்துள்ளது.
ரூ.5.88 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதுதவிர, புதிய கார் மாடல்களையும் அடுத்தடுத்து அறிமுகப்படுத்த சோனாலிகா திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








