வாகன இறக்குமதி வரியை100% உயர்த்திய இலங்கை: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு

இலங்கையின் வாகன மார்க்கெட்டில் இந்திய வாகன நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், சிறிய கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட பெரும் பகுதி வாகனங்கள் இந்தியாவிலிருந்துதான் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன் இறக்குமதி வாகனங்களுக்கான வரியை 100 விழுக்காடு உயர்த்தியிருக்கிறது இலங்கை அரசு. இதனால், இந்திய வாகன தயாரிப்பாளர்களின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
மாருதியின் மொத்த ஏற்றுமதியில் இலங்கை 5 விழுக்காடு பங்களிப்பை தருகின்றது. இதுபோன்று, பஜாஜ் ஆட்டோவின் ஏற்றுமதியில் 40 விழுக்காடு பங்களிப்பை இலங்கை கொண்டிருக்கிறது. இதேபோன்று, பல்வேறு இந்திய நிறுவனங்களும் இலங்கைக்கு வாகன ஏற்றுமதி மூலம் நல்ல வருவாயை ஈட்டி வருகின்றன.
இந்தநிலையில், இலங்கை அரசின் இந்த திடீர் முடிவால் விழி பிதுங்கியிருக்கின்றன. இறக்குமதி வரியை குறைக்குமாறு இலங்கைக்கு வேண்டுகோள் விடுக்க மத்திய அரசு வழியாக இந்திய ஆட்டோமொபைல் கூட்டமைப்பு(சியாம்) முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.
இதனிடையே, இந்த பிரச்னை குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. "வாகன இறக்குமதி வரியை குறைப்பது குறித்து இலங்கை அரசிடம் விரைவில் ராஜ்ய ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது,"என மத்திய வர்த்தக துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ராஜீவ் கெர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதையடுத்து இலங்கையிலேயே வாகன ஆலைகளை அமைப்பது குறித்து முன்னணி நிறுவனங்கள் தீவிர பரீசிலனையில் இறங்கியுள்ளன. இலங்கையில் புதிய கார் ஆலை அமைப்பது குறித்து நாட்டின் முன்னணி கார் நிறுவனமான மாருதி தீவிர பரிசீலனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








