அக்.17ல் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்!!
அடுத்த மாதம் 17ந் தேதி இரண்டாம் தலைமுறை ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் ஆடம்பர எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த மார்ச் மாதம் நியூயார்க் ஆட்டோ ஷோவில் இந்த புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது.
ஜேம்ஸ்பாண்ட் நாயகன் டேனியல் கிரேய்க் இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்ததோடு, நியூயார்க் மான்ஹட்டன் வீதிகளில் வலம் வந்து பார்வையாளர்களை கவர்ந்தார். இந்த நிலையில், சமீபத்தில் இந்த புதிய எஸ்யூவி தாயகமான பிரிட்டனில் விற்பனைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் இந்தியாவிலும் இந்த புதிய ஆடம்பர எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது.
(லேண்ட்ரோவர் கார்களின் விபரங்கள்)

இரண்டு மாடல்கள்
வி6 டீசல் மற்றும் வி8 பெட்ரோல் ஆகிய இரண்டு எஞ்சின் மாடல்களில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதனை லேண்ட்ரோவர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

3.0 லி எஞ்சின்
292 எச்பியையும், 600 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் பேஸ் மாடலாக விற்பனை செய்யப்படும்.

வி8 எஞ்சின்
5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலும் இந்தியாவுக்கு வருகிறது. இது 510 எச்பி ஆற்றலையும்,625 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

டாப் ஸ்பீடு
வி6 எஞ்சின் மாடல் மணிக்கு 222 கிமீ வேகத்திலும், வி8 எஞ்சின் மாடல் மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இலகு எடை
சஸ்பென்ஷன், டிரான்ஸ்மிஷன், அலுமினியம் மோனோகாக் சேஸீ என அனைத்தும் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, பழைய ஸ்போர்ட் மாடலைவிட புதிய ஸ்போர்ட் 62 மிமீ கூடுதல் நீளமும், 178 மிமீ கூடுதல் வீல் பேஸும் கொண்டது. இதன் மூலம், மூன்றாவது வரிசையில் 2 சிறியவர்கள் அமர வழிவகை செய்யப்பட்டுள்ளதால் 7 சீட்டர் எஸ்யூவியாக மாறியுள்ளது. எடையும் வெகுவாக குறைந்ததோடு, அதிக மைலேஜ், குறைந்த கார்பன் புகை வெளியிடும் தன்மை கொண்டதாக வருகிறது.

எதிர்பார்க்கும் விலை
ஒரு கோடி விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








