மாணவர்களுக்கு நானோ கார் பரிசு கொடுத்து 'அசத்திய' அகிலேஷ்!
தேசிய பள்ளிக்கூட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நானோ காரை பரிசாக வழங்கியுள்ளார் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.
தேசிய அளவிலான பள்ளிக்கூட விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 29ந் தேதி முதல் கடந்த 2ந் தேதி வரை நடந்தது. நாடு முழுதும் இருந்து 2,600 விளையாட்டு வீரர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கு நானோ காரும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட்டது. இதுதவிர, அகிலேஷ் யாதவின் தந்தையும், சமாஜ்வாடி தலைவருமான முலாயம் சிங் வெற்றி விளையாட்டு வீரர்களுக்கு 21,000 ரொக்கப் பரிசையும் வழங்கினார்.
இந்த நிலையில், விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் நானோ காரை பரிசாக வழங்கினாலும், காரை ஓட்டுவதற்கான லைசென்ஸ் எடுக்க 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
ஆனால், விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் 17 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதால் டிரைவிங் லைசென்ஸ் எடுக்கக் கூட விண்ணப்பிக்க முடியாது. இது குறித்து சிறு சர்ச்சை எழுந்தது. இருப்பினும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விஷயம் என்பதால் இந்த விஷயம் பெரிதாக்கப்படவில்லை.
இதுபோன்று, ஏற்கனவே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்எல்ஏ.,க்கள் ரூ.20 லட்சத்தில் சொகுசு கார் வாங்கிக் கொள்ளலாம் என்று அகிலேஷ் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








