நம்பர்-1 இடத்தில் ஆடி: 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது பிஎம்டபிள்யூ!
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டின் விற்பனை நிலவரம் தலைகீழாக மாறிப் போயுள்ளது. ஆடி, பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஒரு படி முன்னேறி முறையே முதல், இரண்டாம் இடங்களையும், இரு இடங்கள் கீழே இறங்கி பிஎம்டபிள்யூ மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
ஒரு மாதங்களுக்கு பின்னர்தான் இந்த விற்பனை அறிக்கையை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன? மூன்று கார் நிறுவனங்களும் விற்பனை செய்த கார்களின் விற்பனை எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடரில் காணலாம்.

ஆடியின் அதிர்ஷ்டம்
ஆடி பக்கம் அதிர்ஷட காற்று சற்று பலமாகவே வீசி வருகிறது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் துணை பிராண்டாக செயல்படும் ஆடி முதல் காலாண்டில் விற்பனையில் முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. மேலும், அடுத்த நிறுவனங்கள் எளிதில் தொட்டுவிட முடியாத எண்ணிக்கையையும் பதிவு செய்துள்ளது.

ஆடி விற்பனை
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில் மொத்தம் 2,616 கார்களை ஆடி விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 2269 கார்களை ஆடி விற்பனை செய்திருந்தது. இதே நிலை தொடர்ந்தால் இந்த ஆண்டு 10,000 கார்கள் என்ற புதிய விற்பனை எண்ணிக்கை ஆடி கடக்கும்.

இரண்டாமிடத்தில் பென்ஸ்
எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் கார் விற்பனை செய்து வந்த மெர்சிடிஸ் பென்ஸை 2010ல் பிஎம்டபிள்யூ ஓவர்டேக் செய்தது. மேலும், பென்ஸ் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில், சில காலம் கழித்து மீண்டும் ஒரு படி முன்னேறி தற்போது இரண்டாம் இடத்துக்கு பென்ஸ் முன்னேறியுள்ளது.

பென்ஸ் விற்பனை
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், மொத்தம் 2,009 சொகுசு கார்களை விற்பனை செய்துள்ளது. பென்ஸ் விற்பனையில் பி கிளாஸ் முக்கிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது.

பின்னுக்குப் போன பிஎம்டபிள்யூ
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் வெறும் 1,465 கார்களை மட்டுமே பிஎம்டபிள்யூ விற்பனை செய்துள்ளது. இதில், மினி பிராண்டில் விற்பனை செய்யப்பட்ட 55 கார்களையும் சேர்த்துத்தான் இந்த கணக்கு. மேலும், ஆடி விற்பனையுடன் ஒப்பிடும்போது பிஎம்டபிள்யூ படு மோசமான விற்பனையாக இருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 2,369 கார்களை விற்பனை செய்திருந்தது. இதை ஒப்பிடும்போது தற்போது விற்பனை 40.5 சதவீதம் சரிவு கண்டுள்ளது.

பசப்பிய பிஎம்டபிள்யூ
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு விற்பனை அறிக்கை மிகவும் தாமதமானதற்கு, பிஎம்டபிள்யூ தனது விற்பனை அறிக்கையை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பிடம் வழங்காததே காரணம். குறைந்த விற்பனை என்பதாலேயே உடனடியாக விற்பனை அறிக்கையை பிஎம்டபிள்யூ தரவில்லை என்று கூறப்படுகிறது.

ஆடியிடமும் வில்லங்கம்
ஆடி நிறுவனம் ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கைய தருவதை தனது சர்வதேச கொள்கையாக வைத்துள்ளது. இதனால், இது உண்மையான நிலவரம் அல்ல என்று ஒருபுறம் குற்றச்சாட்டு இருக்கிறது. அப்படி பார்த்தாலும், ஆடியை பென்ஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் நெருங்க முடியாத நிலைதான் இருக்கிறது.

உருண்ட தலைகள்
ஆடியின் விஸ்வரூபத்தால் பிஎம்டபிள்யூ மற்றும் பென்ஸ் நிறுவனங்கள் இந்திய பிரிவு தலைவர்களை கடந்த ஆண்டு இறுதியில்அதிரடியாக மாற்றியது நினைவிருக்கலாம்.

அடுத்த யுக்தி
ஆடியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் விதமாக குறைந்த விலை கார்களை களமிறக்க பிஎம்டபிள்யூ, பென்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சத்திற்கும் குறைவான விலையில் புதிய ஏ கிளாஸ் காரை ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பென்ஸ் நிறுவனமும், ரூ.18 லட்சம் முதல் ரூ.20 லட்சத்திற்கும் இடைப்பட்ட விலையில் 1 சீரிஸ் காரை செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வர பிஎம்டபிள்யூவும் திட்டமிட்டுள்ளன.

ஆடியின் வெற்றிக்கு...
ஆடியின் வெற்றிக்கு சினிமா நட்சத்திரங்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வருவதும் முக்கிய காரணம். பாலிவுட், கோலிவுட் என பிரபல நட்சத்திரங்களுக்கு காரை பரிசளித்ததுடன், ஆடி தலைவர் மைக்கேல் பெர்ஷகே அவர்களது வீட்டுக்கே சென்று காரை டெலிவிரி கொடுத்து நெரங்கிய பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டது.

தொடருமா?
அடுத்து வரும் மாதங்களில் இதே நிலை தொடர்ந்தால், முடிவில் ஆடி நம்பர்-1 இடத்தை நிரந்தரமாக்கும். மேலும், பிஎம்டபிள்யூ, பென்ஸ் நிறுவனங்களின் குறைந்த விலை கார்களால் ஆடிக்கு நெருக்கடி ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








