போக்குவரத்து மீறல்களை தடுக்க பெங்களூர் போலீசாரின் நூதன ஐடியா!
போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கவும், தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை போலீசார் எடுத்து வருகின்றனர். முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பிலும், ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இருப்பினும், எந்நேரமும் போலீசார் பணியில் ஈடுபட முடியாத நிலை இருக்கிறது. கண்காணிப்பு கேமரா, திடீர் சோதனைகள் என எதுவும் போதிய பலனை அளிக்கவில்லை. இதனால், போக்குவரத்து விதி மீறல்களை போதிய அளவு தடுக்கமுடியவில்லை. 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்' என்ற ரீதியில்தான் இன்றைய நிலைமை இருக்கிறது.

மேலும், பெங்களூர் முழுவதும் போக்குவரத்து சந்திப்புகளை கண்காணிக்க கூடுதலாக 500 போலீசார் தேவைப்படுகின்றனர். ஆனால், அது உடனடி சாத்தியம் இல்லை.
எனவே, போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வகையில், முக்கிய சந்திப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசலும், விதி மீறல்கள் அதிகம் நடக்கும் இடங்களில் போக்குவரத்து காவலர் போன்ற படம் ஒட்டப்பட்ட கட் அவுட்களை நிறுத்தும் பணிகளை பெங்களூர் மாநகர போலீசார் துவங்கியுள்ளனர்.
தூரத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு போலீஸ்காரர் நிற்பது போன்றே தெரியும் என்பதால், விதிமீறல்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால், இது போதிய பலனை தருமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
வடகம், வற்றல் காய வைக்கும்போது காகத்தை விரட்ட கிராமங்களில் கருப்பு துணி அல்லது இறகுகளை தொங்கவிட்டு காகங்களை ஏமாற்றவதை கண்டிருக்கிறோம். ஆனால், நம்மவர்களை ஏமாற்ற முடியுமா?
பொறுத்திருந்து பார்ப்போம் இந்த டூப்ளிகேட் போலீசுக்கு நம்மவர்கள் அசங்குவார்களா என்று...!!


Click it and Unblock the Notifications








