உலகின் காஸ்ட்லி ஆடம்பர எஸ்யூவியை களமிறக்கும் பென்ட்லீ!
உலகின் மிக அதிக விலை கொண்ட ஆடம்பர எஸ்யூவியை பென்ட்லீ பிராண்டில் ஃபோக்ஸ்வேகன் குழுமம் அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் EXP 9 F என்ற பெயரில் கான்செப்ட் மாடலாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த எஸ்யூவியை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்வதற்கான அறிவிப்பு நேற்று பென்ட்லீயின் தலைமையகம் அமைந்துள்ள கிரெவ் நகரில் நடந்தது. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையில் நடந்த விழாவில் இந்த எஸ்யூவியை உற்பத்தி நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டது.

உற்பத்தி எப்போது?
வரும் 2016ம் ஆண்டில் இந்த புதிய எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. கிரெவ் நகரில் உள்ள பென்ட்லீ ஆலையில்தான் இந்த புதிய எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த புதிய எஸ்யூவி தயாரிப்பு மூலம் புதிதாக 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

முதலீடு
அடுத்த மூன்றாண்டுகளில் இந்த புதிய எஸ்யூவி உற்பத்திக்காக 1.2 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட உள்ளது.

4வது மாடல்
கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர், கான்டினென்டல் ஜிடி மற்றும் முல்சான் ஆகிய 3 கார் மாடல்களை பென்ட்லீ விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், பென்ட்லீயின் 4வது மாடலாக இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வருகிறது.

பிளாட்ஃபார்ம்
ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் டூரக், போர்ஷே கேயென் உள்ளிட்ட எஸ்யூவி கார்கள் வடிவமைக்கப்படும் பொதுவான பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய எஸ்யூவியும் உருவாக்கப்படுகிறது. அடுத்த தலைமுறை ஆடி க்யூ7 மற்றும் லம்போர்கினி உரஸ் ஆகியவையும் இந்த பிளாட்பார்மில்தான் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

எஞ்சின்
புதிய பென்ட்லீ ஆடம்பர எஸ்யூவியில் 4.0 லி வி8 டர்போசார்ஜர் எஞ்சின் அல்லது 6.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதன் ஹைபிரிட் மாடலும் வடிவமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

டாப் ஸ்பீடு
மணிக்கு 300 கிமீ வரை செல்லும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் இந்த புதிய எஸ்யூவி.

விலை
உயர்ரக கார் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட இருக்கும் இந்த எஸ்யூவி 1.50 லட்சம் பவுண்ட் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








