பெங்களூரில் முதல்முறையாக எலக்ட்ரிக் பஸ் சோதனை ஓட்டம்
நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூரில் முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் சிட்டி பஸ் விரைவில் சோதனை முறையில் இயக்கப்பட உள்ளது.
சீனாவை சேர்ந்த சென்ஸென் பிஒய்டி ஆட்டோ நிறுவனத்தின் தயாரிப்பான கே9 என்ற எலக்ட்ரிக் மாடல் பஸ் மூன்று மாதங்களுக்கு சோதனை முறையில் இயக்கி சாதக, பாதகங்களை ஆராய உள்ளதாக பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் நண்பன்
இந்த பஸ் முழுவதுமாக பேட்டரியில் இயங்குவதால் புகை வெளியிடாது. இதனால், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனமாக இருக்கும். குறைந்த சப்தத்தை வெளிப்படுத்தும் என்பதும் இதன் சிறப்பம்சம்.

இருக்கை வசதி
இந்த பஸ்சில் 41 பயணிகள் அமர்ந்து செல்வதற்கு இருக்கை வசதி கொண்டது. தவிர, சக்கர நாற்காலி நிறுத்துவதற்கும் தனி இடவசதி உள்ளது.

இயக்குதல் செலவு
ஒரு கிலோமீட்டர் இயக்குவதற்கு ரூ.4 மட்டுமே செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுவதும் பேட்டரியில் இயங்குவதால் பராமரிப்பு செலவு மிக குறைவானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச்
ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிமீ முதல் 300 கிமீ வரை பயணிக்கும் என்பது தயாரிப்பாளரின் பரிந்துரை. இதனை சோதிக்கவே முதலில் சோதனை முறையில் இயக்கி பார்க்க உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

சார்ஜ் நேரம்
ஒருமுறை முழு சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் பிடிக்கும். விரைவு சார்ஜ் ஆப்ஷன் மூலம் 3 மணி நேரத்தில் 50 சதவீதம் சார்ஜ் செய்து இயக்க முடியும்.

குளிர்சாதன வசதி
வால்வோ சிட்டி பஸ்கள் போன்றே இந்த எலக்ட்ரிக் பஸ்சும் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கிறது.

சோலார் சார்ஜ்
சூரிய மின் சக்தி மூலம் சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பகம்
இந்த கே9 எலக்ட்ரிக் பஸ்கள் தற்போது சீனா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடை
இந்த எலக்ட்ரிக் பஸ் 12 மீட்டர் நீளமும், 14,300 கிலோ எடையும் கொண்டது. மணிக்கு 96 கிமீ வேகம் வரை செல்லும்.

கூடுதல் மின்சாரம்
பஸ்சுக்கு சார்ஜ் செய்வதற்காக கூடுதல் மின்சாரத்தை வழங்குவதற்கு பெங்களூர் மின் வினியோக கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications








