இந்தியாவில் 1 சீரிஸ் அடிப்படையில் புதிய மாடல்கள்: பிஎம்டபிள்யூ அறிவிப்பு
இந்தியாவில் 1 சீரிஸ் அடிப்படையிலான புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
பென்ஸ் ஏ கிளாஸ் காருக்கு கிடைத்த மவுசை பார்த்து பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காரையும், ஆடி நிறுவனம் க்யூ3 எஸ்யூவியின் குறைந்த விலை வேரியண்ட்டையும் அறிமுகம் செய்தன.

இந்த நிலையில், 1 சீரிஸ் கார் போன்றே புதிய குறைந்த விலை சொகுசு கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேம்படுத்தப்பட்ட 5 சீரிஸ் கார் அறிமுக விழாவில் பிஎம்டபிள்யூவின் இந்தியப் பிரிவு தலைவர் பிலிப் வான் சர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது," இந்தியாவில் காம்பெக்ட் சொகுசு கார்களுக்கு அதிக வரவேற்பும், தேவையும் இருக்கிறது.
எனவே, 1 சீரிஸ் அடிப்படையிலான புதிய கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக, ரூ.390 கோடி முதலீட்டில் சென்னை ஆலையையும் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம். மேலும், இந்தியாவில் எங்களது விற்பனையில் 90 சதவீதம் டீசல் கார்களின் பங்களிப்பு இருக்கிறது. எனவே, டீசல் கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்," என்றார்.
முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ மீண்டும் முதலிடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கு, குறைந்த விலை சொகுசு கார்களே சிறந்த ஆயுதம் என கருதி புதிய கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








