ரூ.20,000 கோடி மதிப்பு கார்கள் தேக்கம்: தவிக்கும் கார் நிறுவனங்கள்!!
கார் நிறுவனங்கள் மற்றும் டீலர் யார்டுகளில் ரூ.20,000 கோடி மதிப்புடைய கார்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. இதையடுத்து, கார் உற்பத்தியை நிறுத்தி வைக்க மாருதி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
பண்டிகை காலத்தில் உச்சத்தை தொட்ட கார் விற்பனை அதனைத் தொடர்ந்து மிக மிக மந்தமாக இருந்து வருகிறது. இதனால், டீலர்களில் இருப்பு தேங்கியுள்ளது. புத்தாண்டு வரை இந்த நிலையே நீடிக்கும் என்று கருதப்படுகிறது.

மதிப்பு
ரூ.20,000 கோடி மதிப்புடைய கார்கள் தற்போது டீலர்களில் தேங்கியுள்ளன. சராசரியாக தயாரிப்பு தேதியிலிருந்து 4 வாரங்கள் வரை அதிகபட்சம் இருப்பு தேங்கியிருக்கும். ஆனால், தற்போது 6 முதல் 7 வாரங்கள் வரை இருப்பு தேங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நிறுவனங்கள் கவலை
டீலர் மற்றும் கார் தயாரிப்பு நிறுவனங்களின் யார்டுகளில் தற்போது 60 நாட்கள் வரை கார்கள் விற்பனையாகாமல் தேங்கி நிற்கின்றன. ஒரு காருக்கு ரூ.6 லட்சம் சராசரி மதிப்பு வைத்தால் கூட ரூ.20,000 கோடி மதிப்புடைய கார்கள் தேக்கமடைந்துள்ளன. இது மிக மிக அதிகம். இது கவலை தருவதாக உள்ளது என்று தனியார் வங்கியின் வாகன கடன் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஜெர்மனி கார்கள்
பண்டிகை காலத்தில் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை. இதனால், இருப்பை குறைக்க முடியவில்லை என பிரபல ஜெர்மன் பிராண்டு டீலர் ஒருவர் தெரிவித்தார். நம் நாட்டில் ஜெர்மன் நாட்டு நிறுவனங்கள் தயாரித்த 28,000 கார்கள் தற்போது தேக்கமடைதுள்ளன என்று வாகன கூட்டமைப்பு புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி கருத்து
பொதுவாக பண்டிகை காலத்தில் உச்சம் பெறும் கார் விற்பனை நவம்பரில் மந்தமாக இருப்பது வழக்கம். டிசம்பரில் இந்த ஆண்டு தயாரிப்பு கார்களை விற்றுவிட திட்டமிட்டுள்ளோம். இருப்பில் இருக்கும் கார்களை டிசம்பருக்குள் விற்றுத் தீர்த்துவிட திட்டமிட்டுள்ளோம் என்று மாருதியின் சந்தைப்படுத்துத்தல் மற்றும் விற்பனைப் பிரிவு தலைமை அதிகாரி மாயங்க் ஃபரீக் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் உற்பத்தியை குறைப்பது வழக்கம் என்றும், தற்போது இருப்பு 6 வாரங்களுக்கு மேல் இருப்பதாகவும், ஜனவரி 1ந் தேதிக்குள் இதனை 3 வாரங்களாக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஜிஎம் முடிவு
இருப்பு மிகாதவாறு கடந்த இரு மாதங்களாகவே வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே கார் உற்பத்தி செய்து வருகிறோம். இதன் காரணமாக தற்போது இருப்பு 4 வாரங்களாக இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் செய்தி தொடர்பாளர் பி.பாலேந்திரன் கூறினார். மஹிந்திராவின் இருப்பு விகிதம் தற்போது 6 வாரங்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே சரியான தருணம்
இருப்பை தீர்த்துக் கட்டுவதற்காக பல முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து அனைத்து கார் மாடல்களுக்கும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஜனவரியில் கார் விலையை உயர்த்துவதாக பல்வேறு நிறுவனங்களும் அறிவித்துள்ளதால், சலுகைகளோடு கார் வாங்குவதற்கான ஏற்ற காலமாக இதனை கூறுகின்றனர் ஆட்டோமொபைல் துறையினர்.


Click it and Unblock the Notifications








