ரூ.650 கோடி வரி ஏய்ப்பு: பிஎம்டபிள்யூவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!

வெளிநாடுகளில் இருந்து முழுமையாக தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு விலைக்கு இணையாக வரி செலுத்த வேண்டியிருக்கிறது. அதேவேளை, உதிரிபாகங்களை தனித்தனியாக இறக்குமதி செய்தால், அதற்கு இறக்குமதி வரியாக 10 சதவீதம் செலுத்தினால் போதுமானது.
இதனால், இந்தியாவில் கார் விற்பனை செய்யும் பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் எஞ்சின், டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட முக்கிய உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் கார்களை அசெம்பிள் செய்கின்றன. ஜெர்மனியை சேர்ந்த பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனமும் சென்னையில் கார் அசெம்பிளிங் ஆலை அமைத்து கார்களை உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கிய உதிரி பாகங்களை விதிமுறைகளுக்குட்பட்டு தனித் தனியாக இல்லாமல், பல பாகங்களை ஒருங்கிணைத்து பிஎம்டபிள்யூ இறக்குமதி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுபோன்று, இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களுக்கு 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
ஆனால், ஆவணங்களில் பாகங்களை தனித் தனியாக இறக்குமதி செய்தது போன்று பிஎம்டபிள்யூ குறிப்பிடப்பட்டிருப்பதாக சுங்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரூ.650 கோடி வரை பிஎம்டபிள்யூ வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்து சுங்க வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, விரைவில் பிஎம்டபிள்யூ.,வுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








