எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்கும் மாருதி, டாடா மோட்டார்ஸ்!
மஹிந்திராவை தொடர்ந்து மாருதி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் விரைவில் இறங்குகின்றன.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்க சிறப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

எலக்ட்ரிக் டாக்சி
டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பயணிகளின் இருப்பிடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு விடுவதற்கான சிறப்பு டாக்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு எலக்ட்ரிக் கார்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

அறிவிப்பு
மும்பையில் சமீபத்தில் கனரக தொழிற்துறை அமைச்சகம் மற்றும் இந்திய ஆட்டோமொபைல் கூட்டமைப்பு இடையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய கனரக தொழிற்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் அம்புஜ் சர்மா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தூரம்
டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து 5 முதல் 6 கிமீ தூரத்திலான இடங்களுக்கு மட்டுமே இந்த எலக்ட்ரிக் டாக்சிகள் இயக்கப்படும்.

மாடல்கள்
இந்த எலக்ட்ரிக் டாக்சி திட்டத்திற்காக மஹிந்திரா நிறுவனம் மேக்ஸிமோ மினி வேனையும், மாருதி ஈக்கோ வேனையும், டாடா மோட்டார்ஸ் ஏஸ் அடிப்படையிலான பயணிகள் வேனையும், மாஜிக் பயணிகள் வாகனத்தையும் களமிறக்குகின்றன.

அறிவிப்பு
எலக்ட்ரிக் கார் மற்றும் இருசக்கர வாகன விற்பனையை ஊக்குவிப்பதற்காக அடுத்த ஆண்டு ஏப்ரலில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் சிறப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும்போது இந்த எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு குறித்த விபரங்களை சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்களும் வெளியிட உள்ளன.


Click it and Unblock the Notifications








