கேரளாவில் ஃபெராரி கார் ஓட்ட அனுமதித்த 9 வயது சிறுவனின் தந்தை கைது

கேரளாவில் 9 வயது சிறுவன் ஃபெராரி சூப்பர் கார் ஓட்டும் வீடியோ பதிவு கடந்த சில வாரங்களுக்கு முன் யூ டியூபில் வெளியானது. அந்த சிறுவன் ஃபெராரி எஃப்- 430 சூப்பர் காரை பொது சாலையில் ஓட்டியதை அவரது பெற்றோரே வீடியோவாக எடுத்து யூ டியூபில் வெளியிட்டனர்.
மேலும், தங்களது மகனின் டிரைவிங் திறமை குறித்து புலாகாங்கிதத்துடன் இருவரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறுவனை இதுபோன்று டிரைவிங் செய்ய அனுமதிப்பது தவறு என்று பலர் கருத்து கூறியிருந்தனர்.
இந்த விஷயம் போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து, கார் ஓட்டிய 9 வயது சிறுவனின் தந்தை முஹம்மது நிஷாம் மீது திருச்சூர் அருகேயுள்ள பெரமங்கலம் காவல் நிலையத்தில், மோட்டார் வாகன சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, சிறுவனின் தந்தை முஹம்மது நிஷாம் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு டெல்லியில் 14 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து 2 சிறுமிகளை பலிவாங்கியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








