அடுத்த ஆண்டு புதிய கிராஸ்ஓவர் கார் அறிமுகம் ஃபியட் விறுவிறு
அடுத்த ஆண்டு புத்தம் புதிய கிராஸ்ஓவர் ரக காரை அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபியட் தெரிவித்துள்ளது. இது ஃபியட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
ஜீப் பிராண்டில் ரேங்லர் மற்றும் செரோக்கீ அறிமுகமாக இருக்கும் நிலையில், தற்போது புதிய கிராஸ்ஓவர் காரை தனது பிராண்டில் அறிமுகம் செய்ய ஃபியட் முடிவெடுத்துள்ளது.

அது எந்த மாடல்?
புதிய கிராஸ்ஓவரை அறிமுகம் செய்ய உள்ளோம் என்பதை ஃபியட் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த மாடல் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அது ஃபியட்டின் புதிய 500எக்ஸ் கிராஸ்ஓவர் காராக இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

மாற்று மாடல்
ஐரோப்பிய மார்க்கெட்டில் செடிசி கிராஸ்ஓவருக்கு மாற்றாக ஃபியட் 500 எக்ஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஃபியட் மற்றும் சுஸுகி கூட்டாக தயாரித்த மாடல்தான் செடிசி. ஃபியட் பிராண்டில் செடிசி என்ற பெயரிலும், சுஸுகி பிராண்டில் எஸ்எக்ஸ்4 கிராஸ்ஓவர் ரகத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தனது சொந்த பிராண்டில் தயாரிக்கப்பட்ட புதிய 500எக்ஸ் காரை செடிசிக்கு மாற்றாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபியட் திட்டமிட்டுள்ளது. இந்த காரையே தற்போது இந்தியாவில் ஃபியட் விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் உற்பத்தி
புன்ட்டோ அபார்த் மற்றும் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது. அதேவேளை, இந்த புதிய கிராஸ்ஓவர் காரை ரஞ்சன்கவுனில் டாடா- ஃபியட் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வரும் கார் ஆலையில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது.

எஞ்சின்
புன்ட்டோ ஹேட்ச்பேக் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே டீசல் எஞ்சின் மற்றும் கியர் பாக்ஸ் கொண்டதாக புதிய கிராஸ்ஓவர் கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி
அடுத்த சில ஆண்டுகளில் கிராஸ்ஓவர் கார்களுக்கான மார்க்கெட் சூடு பிடிக்கும் வாய்ப்புள்ளது. இதனை மனதில் வைத்து புதிய கிராஸ்ஓவர் ரக காரை நிலைநிறுத்த ஃபியட் முடிவு செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் போலோ கிராஸ்ஓவருக்கு இந்த காருக்கும் போட்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications








