ஆல்ட்டோ போட்டியாளரை அறிமுகப்படுத்தும் ஃபோர்டு
புத்தம் புதிய சிறிய ரக ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.
2015ம் ஆண்டிற்குள் 8 புதிய கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம், அதில் ஒன்றாக இந்த புதிய குட்டிக் காரை குறிப்பிட்டுள்ளது.

ரகம்
இந்திய மார்க்கெட்டில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஃபிகோவுக்கு கீழே இந்த புதிய காரை நிலை நிறுத்த ஃபோர்டு முடிவு செய்துள்ளது. இந்த புதிய கார் ஆல்ட்டோ 800, இயான் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

விலை
ரூ.3.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் விலையில் புதிய ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஃபோர்டு புதிய கார் குறித்த எந்த கூடுதல் தகவலையும் வெளியிடவில்லை.

4 ல் ஒன்று
ஏற்கனவே அறிவித்தபடி, ஈக்கோஸ்போர்ட் உள்பட 4 புதிய மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது. மீதமுள்ள 4 புதிய மாடல்களில் புதிய ஃபிகோ, புதிய செடான் கார் மற்றும் குட்டிக் காரும் இடம்பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. திட்டமிட்ட காலத்திற்குள் இந்த புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈக்கோஸ்போர்ட் என்னாச்சு?
ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு முன்பதிவு செய்து காத்திருக்கும் 30,000 வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்க வேண்டியிருப்பதாகவும், 4 முதல் 6 மாதங்கள் காத்திருப்பு காலம் இருப்பதாகவும் ஃபோர்டு அதிகாரி வினய் பிபர்சானியா தெரிவித்தார்.

உற்பத்தி திட்டம்
காத்திருப்பு காலத்தை குறைக்கும் விதமாக ஈக்கோஸ்போர்ட் உற்பத்தியை கூட்டுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், ஆனால் இதுகுறித்த இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








