ஆஸ்திரேலியாவில் கார் ஆலைகளை இழுத்து மூட ஃபோர்டு முடிவு

ஆஸ்திரேலியாவில் கடந்த 85 ஆண்டுகளாக அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய வர்த்தகத்தில் ஃபோர்டுக்கு மரண அடி விழுந்து வருகிறது.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் 580 மில்லியன் டாலர் அளவுக்கு ஃபோர்டுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஃபோர்டு நிறுவனத்துக்கு அந்நாட்டு அரசு 34 மில்லியன் டாலர் அளவுக்கு வரிச்சலுகைகளை அளித்தது. அதற்கும் பலன் கிடைக்கவில்லை.
எனவே, அங்கு உள்ள தனது 2 கார் ஆலைகளையும் மூடுவதற்கு ஃபோர்டு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் கிராஸியானோ கூறுகையில்,"ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக தொடர்ந்து கார் உற்பத்தி செய்ய முடியாத நிலை இருக்கிறது.
இறக்குமதி செய்யப்படும் கார்கள் லாபத்தை ஈட்டும் அதேவேளையில், இங்கேயே உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு காரிலும் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே, இங்கு உற்பத்தியை தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பாவை ஒப்பிடும்போது இங்கு கார் உற்பத்தி செலவு இரு மடங்கும், ஆசியாவைவிட கால் மடங்கும் அதிகமிருக்கிறது," என்று கூறினார்.
கார் உற்பத்தியை ஃபோர்டு நிறுத்த முடிவு செய்திருப்பதால், அந்நாட்டிலுள்ள ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோடு, மறைமுகமாக பயன்பெற்று வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








