தவேரா எஞ்சினில் பித்தலாட்டம்... ஜி.எம்.,க்கு ரூ.3.4 கோடி அபராதம் விதிக்க முடிவு!

இந்தியாவில் 2005ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது முதல் கடந்த மாதம் வரை விற்பனை செய்யப்பட்ட தவேரா கார்கள் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி தயாரிக்கப்பட்டது சமீபத்தில் தெரிய வந்தது.
இதையடுத்து, பிரச்னையை சரி செய்து தருவதற்காக இதுவரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 1.14 லட்சம் தவேரா கார்களுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் ரீகால் அழைப்பு விடுத்தது. இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் அதிக கார்களை திரும்ப பெறும் அறிவிப்பாக இது வெளியிடப்பட்டது.
இந்த பிரச்னை தொடர்பாக, இந்தியா மற்றும் அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் 35 அதிகாரிகளை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய ஜெனரல் மோட்டார்ஸ் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, 3 நபர் விசாரணை கமிட்டியையும் அமைத்து விசாரணையை விரைவில் துவங்க உள்ளது. மேலும், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ.3.4 கோடி அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தவேராவுக்கான புதிய பிஎஸ்3 எஞ்சினை அராய் சோதனைக்காக ஜெனரல் மோட்டார்ஸ் அனுப்பியிருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் இந்த எஞ்சினுடன் கூடிய தவேரா விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








