செயில் ஹேட்ச்பேக், செடான் கார்களை திரும்ப பெறும் ஜிஎம்
எஞ்சினில் இருக்கும் தொழில்நுட்ப பிரச்னையை சரி செய்து தருவதற்காக செயில் ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் டீசல் மாடலை திரும்ப பெற இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலையில்தான் 1.14 லட்சம் தவேரா கார்களை ஜெனரல் மோட்டார்ஸ் திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, தற்போது டீசல் மாடல் செயில் ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

இந்த இரு கார்களின் டீசல் மாடல் உற்பத்தி கடந்த ஜூலை மாதம் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர், பிரச்னை கண்டறியப்பட்டு சரி செய்த பின்னர் தற்போது உற்பத்தி சீராகி உள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட மொத்தம் 4,000 செயில் ஹேட்ச்பேக், செயில் செடான் கார்கள் திரும்ப அழைக்கப்பட்டு பிரச்னை சரி செய்து தரப்பட உள்ளதாகவும், இதில் பாதுகாப்பு பிரச்னைகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி தகவல் அனுப்பப்படும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த பிரச்னையை இலவசமாக சரி செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








