கிரவுன்ட் கிளியரன்ஸ் விதியில் திருத்தம்: எஸ்யூவிகளுக்கு மீண்டும் சிக்கல்!
எஸ்யூவி கிரவுன்ட் கிளியரன்ஸ் விதியை மீண்டும் மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
170மிமீ உயரத்திற்கும் கூடுதலான கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களை எஸ்யூவி மாடலாக வரையறுத்து மத்திய அரசு சமீபத்தில் புதிய விதியை வெளியிட்டது.

இதற்கு கூடுதல் வரி விதிப்பும் நடைமுறைப்படுத்தப்பட்டது. மத்திய அரசிடம் மஹிந்திரா பல முறை வேண்டுகோள் விடுத்தும் இந்த விதியை திரும்ப பெறுவதற்கான பேச்சுக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இது அதிக யுட்டிலிட்டி ரக வாகனங்களை உற்பத்தி செய்து வரும் மஹிந்திராவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்த சிக்கலை போக்கிக் கொள்வதற்காக எக்ஸ்யூவி 500 காரின் கிரவுன்ட் கிளியரன்ஸை மஹிந்திரா 200 மிமீ அளவிலிருந்து 160 ஆக குறைத்தது.
இதற்காக, ஸ்டோன் கார்டு ஒன்றை பொருத்தி பிரச்னையை எளிதாக முடிவுக்கு கொண்டு வந்தது. வரிச்சலுகை கிடைத்ததால் ரூ.30,000 வரை எக்ஸ்யூவி விலையை குறைப்பதாக தெரிவித்தது. டிசைனில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட வில்லை.
இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவியில் ஸ்டோன் கார்டு பொருத்தி வரிச்சலுகை கிடைத்தது மத்திய அரசுக்கு உறுத்தலாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, இந்த விதிகளில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதாவது, முழுவதும் எடை நிரப்பப்பட்ட நிலையில், கிரவுன்ட் கிளியரன்ஸ் அளவிடும் நடைமுறை தற்போது இருக்கிறது. இதனை மாற்றி வெற்று எடையில் காரின் கிரவுன்ட் கிளியரன்ஸை அளவிடும் முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால், எஸ்யூவி கார்களுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இது மஹிந்திராவுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான மோதலாகவே ஆட்டோமொபைல் துறையினர் நோக்குகின்றனர்.


Click it and Unblock the Notifications








