குஜராத்தில் மாருதி கார் ஆலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி குஜராத் மாநிலத்தில் தனது புதிய ஆலையை அமைக்க இருக்கிறது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவையை நிறைவு செய்யும் விதத்தில் அங்கு மிக பெரிய முதலீட்டில் இந்த புதிய கார் ஆலையை கட்ட திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், மாருதியின் புதிய ஆலை அமைக்க இருக்கும் ஹன்சால்பூர் கிராமத்தை ஒட்டி இருக்கும், 1,26,000 ஏக்கர் நிலத்தை சிறப்பு முதலீட்டு மண்டலமாக(SIR) குஜராத் அரசு அறிவித்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம் போன்றே, அந்த பகுதியை தொழிற்பேட்டையாக மாற்றும் வித்தில் இந்த அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு அந்த பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் இருக்கும் மொத்தம் 44 கிராம சபைகளில், 36 கிராம சபையை சேர்ந்த விவசாயிகள் அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் தங்களது விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதோடு, அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாருதி ஆலை அமைக்க இருக்கும் ஹன்சால்பூர் கிராமத்தின் தலைவர் அஜ்மல்பாய் தாகூர் கூறுகையில்," சிறப்பு முதலீட்டு மண்டலமாக்குவதற்கான அறிவிப்பை அரசு திரும்ப பெறாவிட்டால், மாருதி ஆலை அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவிப்போம்,"என்று கூறியுள்ளார்.
இந்த பிரச்னையால் அங்கு மாருதியின் புதிய ஆலை அமைப்பதற்கு சிக்கல் எழுந்துள்ளது. மேற்குவங்க மாநிலம், சிங்கூரில் நானோ காருக்காக கட்டப்பட்ட ஆலை விவசாயிகள் மற்றும் அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வரான மம்தா பானர்ஜியின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களால் குஜராத்துக்கு மாற்றப்பட்டது. இப்போது குஜராத்தில் இதே நிலை மாருதிக்கு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications







