சிட்டி டீசல், புதிய ஜாஸ் காரை உறுதிப்படுத்திய ஹோண்டா
ஹோண்டா சிட்டி டீசல் மற்றும் புதிய ஜாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. புதிய ஜாஸ் கார் இந்தியா வருவது தெரிந்த ஒன்றுதான். ஆனால், சிட்டி காரின் டீசல் மாடல் விற்பனைக்கு வராது என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், சிட்டி டீசல் கார் வருவதை ஹோண்டா கார் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பிரபல வர்த்தக இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ஹோண்டா கார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இதுதவிர, விற்பனை நிறுத்தப்பட்ட ஜாஸ் காருக்கு மாற்றாக புதிய தலைமுறை ஜாஸ் கார் வருகையையும் அவர் உறுதிப்படுத்தினார்.

அறிமுகம் எப்போது?
இரண்டு கார்களும் அடுத்த ஆண்டு வர இருக்கிறது. மேலும், இந்த இரண்டு கார்களின் மூலம் தனது மார்க்கெட் பங்களிப்பை வெகுவாக உயர்த்திக் கொள்ள ஹோண்டா பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது.

சிட்டி டீசல் எஞ்சின்
அமேஸ் காரின் டீசல் எஞ்சினை சிட்டியில் பயன்படுத்த இயலாது என்று ஞானேஸ்வர் சென் கூறினார். எனவே, புத்தம் புதிய டீசல் எஞ்சினுடன் சிட்டி வருகிறது.

புதிய ஜாஸ்
புத்தம் புதிய டிசைனில் வரும் ஹோண்டா ஜாஸ் ஆவலை கிளப்பியுள்ளது. பலர் புதிய ஜாஸ் காருக்காக காத்திருக்கின்றனர். இந்த கார் வருகையையும் ஞானேஸ்வர் சென் உறுதிப்படுத்தினார்.

விலை
புதிய ஜாஸ் காரை மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் ஹோண்டா திட்டமிட்டிருக்கிறது.

பட்டியலில் ஹைபிரிட்
ஹைபிரிட் மாடலையும் அறிமுகம் செய்ய ஹோண்டா விரும்புவதாக ஞானேஸ்வர் சென் கூறினார். ஆனால், அரசாங்கத்திடமிருந்து வரிச்சலுகை கிடைத்தால் அதுபற்றி உடனடியாக பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல் ஹைபிரிட் மாடலாக ஹோண்டா சிவிக் விற்பனைக்கு வந்ததும், அதன்பிறகு விற்பனை சரிந்ததால் விற்பனை நிறுத்தப்பட்டதும் நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








