மீண்டும் ஃபார்முலா-1 பந்தயத்தில் களமிறங்கும் ஹோண்டா!
ஃபார்முலா-1 கார் பந்தயங்களில் மீண்டும் களமிறங்குகிறது ஹோண்டா. வரும் 2015ம் ஆண்டு முதல் மெக்லாரன் எஃப்-1 கார்களுக்கு எஞ்சின் சப்ளை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
ஃபார்முலா-1 பந்தயங்களில் மெக்லாரனுடன் இணைந்து ஒரு நேரத்தில் கொடி கட்டி பறந்தது ஹோண்டா. 1988-91ம் ஆண்டுகளுக்கு இடையில் தொடர்ச்சியாக 4 முறை மெக்லாரன்-ஹோண்டா கூட்டணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில், 1988ம் ஆண்டு நடந்த 16 போட்டிகளில் 15ல் இந்த கூட்டணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிந்தது.

இந்த நிலையில், மோசமான தோல்விகள் மற்றும் உலக பொருளாதார சரிவு எதிரொலியால் 2008ம் ஆண்டுடன் ஃபார்முலா-1 போட்டிகளிலிருந்து ஹோண்டா விடைபெற்றது. இதைத்தொடர்ந்து, மெக்லாரான் அணி தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து எஃப்-1 கார்களுக்கான எஞ்சினை பெற்று வருகிறது.
இந்த நிலையில், மீண்டும் ஃபார்முலா-1 போட்டிகளில் களமிறங்குவதாக ஹோண்டா அறிவித்துள்ளது. வரும் 2015ம் ஆண்டு முதல் மெக்லாரான் எஃப்-1 கார்களுக்கு எஞ்சின் சப்ளை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹோண்டா தலைவர் தகனோபு கூறுகையில்," ஆட்டோமொபைல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் ஹோண்டா நீண்ட வரலாறு கொண்டிருக்கிறது.
எனவே, புதிய விதிமுறைகளின்படி, ஃபார்முலா-1 கார்களுக்கான 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின்களை உருவாக்கி வருகிறோம். உலகின் மிகவும் மதிப்புமிக்க ஃபார்முலா-1 போட்டிகளில் மீண்டும் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.
இதேபோன்று, மெக்லாரன் டீம் முதன்மையாளர் மார்ட்டின் விட்மார்ஷும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது புதிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அத்தியாயமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் 2014ம் ஆண்டு வரை மெர்சிடிஸ் பென்ஸ் எஞ்சின்களையே மெக்லாரன் பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








