உற்பத்தியில் புதிய மைல்கல்: சென்னை ஹூண்டாய் ஆலை சாதனை
சென்னையிலுள்ள ஹூண்டாய் கார் ஆலை 5 மில்லியன் கார்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பாலிவுட் நடிகரும், ஹூண்டாய் நிறுவனத்தின் விளம்பரத் தூதருமான ஷாரூக்கான் முன்னிலையி 50 லட்சமாவது காராக கிராண்ட் ஐ10 உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவந்தது.
புதிய மைல்கல்லை எட்டியிருப்பது குறித்து ஹூண்டாய் நிர்வாக இயக்குனர் பி.எஸ்.சியோ பெருமிதம் தெரிவித்துள்ளார். எங்களது நீண்ட கால வர்த்தக் கொள்கைகள் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக இந்த நிகழ்வு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். சென்னை ஹூண்டாய் ஆலையின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்தாபிதம்
தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் கம்பெனியின் துணை நிறுவனமாக கடந்த 1996ம் ஆண்டு மே 6ந் தேதி ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் துவங்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 10ந் தேதி இருங்காட்டுக்கோட்டை ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1998ல் சென்னையில் அமைக்கப்பட்ட கார் ஆலையில் முதலாவதாக சான்ட்ரோ கார் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

பங்களிப்பு
இந்தியாவில் சென்னையில் மட்டுமே ஹூண்டாய் ஆலை செயல்படுகிறது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் மூலம் உள்நாட்டில் (இந்தியாவில்) 20.3 சதவீத மார்க்கெட் பங்களிப்பையும், ஏற்றுமதியில் 46 சதவீதம் மார்க்கெட் பங்களிப்பையும் பெற்றுள்ளது.

ஏற்றுமதி
சென்னை ஹூண்டாய் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் ஐரோப்பா, ஆப்ரிக்கா, மத்திய கிழகுக்கு நாடுகள் உள்பட மொத்தம் 120 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி 1.5 மில்லியன் என்ற புதிய மைல்கல்லை கடந்தது.

உற்பத்தி திறன்
1998ல் அமைக்கப்பட்ட ஆலையை தொடர்ந்து கடந்த 2008ல் சென்னையில் இரண்டாவது கார் ஆலையையும் ஹூண்டாய் அமைத்தது. இந்த ஆலை ஆண்டுக்கு 3.30 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த இரண்டு ஆலைகளும் ஆண்டுக்கு 6.8 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கின்றன.

முதலீடு
தமிழகத்தில் மிகப்பெரிய முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் ஹூண்டாயும் ஒன்று. இதுவரை இந்தியாவில் ரூ.16,000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதோடு, நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.

மாடல்கள்
ஹூண்டாய் கார் நிறுவனம் இயான், ஐ10, வெர்னா, சான்டா பீ உள்பட பல்வேறு ரகங்களில் தற்போது 9 கார் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதில், இயான், ஐ10 கார்கள் ஹூண்டாய் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகின்றன. நாடு முழுவதும் 346 டீலர்களையும், 800 சர்வீஸ் மையங்களையும் கொண்ட வலுவான கட்டமைப்பை பெற்றுள்ளது.

மேம்பாட்டு பிரிவு
ஹைதராபாத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கிராண்ட் ஐ10 கார் கூட இந்திய மார்க்கெட்டுக்கு தகுந்தவாறு இந்த ஆராய்ச்சி மைய நிபுணர்களால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதே வரிசையில் பல புதிய மாடல்களை அந்த நிறுவனம் கொண்டு வர உள்ளதோடு, தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவையும் வலுவாக்கி வருகிறது.

டீசல் எஞ்சின் ஆலை
சென்னையில் 300 மில்லியன் டாலர் முதலீட்டில் புதிய டீசல் எஞ்சின் ஆலையையும் ஹூண்டாய் அமைக்கிறது. இந்த டீசல் எஞ்சின் ஆலை அமைப்பதன் மூலம் செலவீனம் மிச்சப்படுத்தப்படும் என்பதோடு, டீசல் எஞ்சினுக்கான ஸ்பேர் பார்ட்ஸ் விலையும் வெகுவாக குறையும். தவிர, இந்த எஞ்சின் ஆலை பெட்ரோல் மற்றும் டீசல் என இரு எஞ்சின்களையும் தேவைக்கேற்ப உற்பத்தி செய்ய முடியும் என்பது கூடுதல் விசேஷம்..

முண்டாசை உயர்த்திக்கலாம்
மாருதியின் ஆதிக்கத்தில் இருந்து வந்த கார் மார்க்கெட்டை தனது தயாரிப்புகளால் சிறிது உடைத்த பெருமை ஹூண்டாய்க்கு உண்டு. மேலும், இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் மற்றும் தேவைக்கு ஏற்ப புதிய மாடல்களையும் இந்தியாவிலேயே வடிவமைத்து தருவதை எதிர்கால திட்டமாக வைத்துள்ளது ஹூண்டாய்.


Click it and Unblock the Notifications








