செப்டம்பர் 3ல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ரிலீஸ் - கூடுதல் விபரம்
அடுத்த மாதம் 3ந் தேதி ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் விற்பனைக்கு வருகிறது. டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. செப்டம்பர் 2வது வாரத்தில் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில்தான் இந்த கார் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
மேலும், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு இணையாக இந்த ஆண்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாகவும் இது இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால், இதன் பெர்ஃபார்மென்சை பொறுத்துதான் வாடிக்கையாளர்கள் முடிவு செய்யக்கூடும். கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

புளூயிடிக் டிசைன்
புளூயிடிக் டிசைனில் வந்துள்ள மற்றொரு ஹூண்டாய் மாடலான இந்த கார் பார்த்தவுடன் பிடித்துவிடும் தோற்றத்தை கொண்டிருப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைக்கும்.

முதல்முறையாக...
இந்த செக்மென்ட்டில் முதல்முறையாக எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்மென்ட் வசதியுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள், டிரைவர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைத்துக் கொள்ளும் வசதி, ரிவர்ஸ் கேமரா, பின்புற ஏசி வென்ட்டுகள், 2 டின் ஆடியோ சிஸ்டம், கூல்டு கிளவ் பாக்ஸ் ஆகியவை குறிப்பிட்டு கூறலாம்.

டீசல் எஞ்சின்
இந்த காரில் 75 பிஎச்பி சக்தி வரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 3 சிலிண்டர் 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. இதன் மைலேஜும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேரியண்ட்கள்
வசதிகளை பொறுத்து மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்ட்டா மற்றும் அஸ்ட்டா ஆப்ஷனல் ஆகிய 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஆட்டோமேட்டிக் மாடல்
1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சினுடன் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலும் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஸ்விப்ட்டுக்கு நெருக்கடி
கடந்த இரு மாதங்களாக ஸ்விப்ட் காரின் விற்பனை கடுமையாக சரிந்துவிட்டது. இந்த நிலையில், புளூயிடிக் டிசைனில் வரும் புதிய கிராண்ட் ஐ10 ஸ்விப்ட் விற்பனையை மேலும் பதம் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இதுதவிர, ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட பல கார் மாடல்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications








