உலகின் அதிவேக கார் திட்டத்தில் இந்திய வம்சாவளி பெண் எஞ்சினியர்!!
தரையில் நிகழ்த்தப்பட உள்ள உலகின் அதிவேக சாதனைக்கான வாகனத்தின் வடிவமைப்பு குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் பெண் எஞ்சினியர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். தரையின் அதிவேக சாதனை நிகழ்வுக்காக ராக்கெட் வடிவில் புதிய காரை பிளட்ஹவுண்ட் குழுவினர் வடிவமைத்து வருகின்றனர்.
இந்த குழுவில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி இளம் பெண் பொறியாளரான பெவர்லி சிங்கும்(29) இணைய உள்ளார். இன்னும் சில வாரங்களில் தென் ஆப்ரிக்காவிலிருந்து அவர் இங்கிலாந்து செல்கிறார். அங்கு பிளட்ஹவுண்ட் கார் வடிவமைப்பு குழுவில் இணைந்து செயல்பட உள்ளார்.

பொறியாளர் பட்டாளம்
இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் நகரில் உலகின் அதிவேக காரை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. போயிங் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனங்களை சேர்ந்த 30 பொறியாளர்கள் இணைந்து இந்த காரை வடிவமைத்து வருகின்றனர்.

ரோல்ஸ்ராய்ஸ் உதவி
தரையில் நிகழ்த்தப்பட இருக்கும் உலகின் அதிவேக சாதனைக்கான திட்டத்திற்கு ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பான்சர் வழங்க உள்ளது. அதிவேக சாதனைக்கான உருவாக்கப்பட்டிருக்கும் ராக்கெட் போன்ற காருக்கான எஞ்சின், தொழில்நுட்பம் மற்றும் இந்த சாதனைக்கான நிதி உதவிகளை ரோல்ஸ்ராய்ஸ் வழங்குகிறது.

எஞ்சின்
உலகின் அதிவேக சாதனைக்காக உருவாக்கப்பட்டிருக்கும் வாகனத்தில் ஈரோஃபைட்டர் தைபூன் போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் ரோல்ஸ் ராய்ஸின் இஜே200 எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. அதிசக்தி வாய்ந்த இந்த எஞ்சின் மூலம் தங்களது உலக சாதனை கனவு பலிக்கும் என பிளட்ஹவுண்ட் அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பெருமிதம்
"உலகின் ஜாம்பவான் பொறியாளர்கள் இந்த திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இது போன்று சவாலான பணிகள் செய்ய வேண்டும் என்பதை எப்போதுமே விரும்புகிறேன். இது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன் என்று பெவர்லி சிங் கூறியிருக்கிறார்.

முந்தைய சாதனை
மணிக்கு 1228 கிமீ வேகத்தில் தரையில் கார் செலுத்தப்பட்ட நிகழ்வே தற்போது உலக சாதனையாக இருக்கிறது.

புதிய சாதனைக்காக...
2015ம் ஆண்டு இந்த வாகனம் தென் ஆப்ரிக்காவில் வைத்து சோதனைகள் நடத்தப்பட உள்ளன. 2016ம் ஆண்டில் மணிக்கு 1609 கிமீ வேகத்தில் இந்த காரை செலுத்தி புதிய உலக சாதனை படைக்க பொறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








