எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 கார் பந்தயத்தில் பங்கேற்கும் மஹிந்திரா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அடுத்த ஆண்டு முதல்முறையாக துவங்க இருக்கும் எலக்ட்ரிக் ஃபார்முலா - 1 கார் பந்தயத்தில் மஹிந்திரா ரேஸிங் அணியும் பங்கேற்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஃபார்முலா இ என்ற பெயரில் நடைபெற இருக்கும் இந்த பந்தயங்களில் பங்கேற்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கும் 8 அணிகளில் மஹிந்திராவும் இடம் பிடித்துள்ளது. மஹிந்திரா ரேஸிங் அமைப்பின் தலைவர் எஸ்பி.சுக்லாதான் இந்த ஃபார்முலா இ அணிக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிக முதலீடு
உலகின் பணக்கார விளையாட்டுகளில் முதன்மையானதாக ஃபார்முலா- 1 கார் கூறப்படுகிறது. மேலும், எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 பந்தயங்களில் பங்கேற்கும் அணிகள் பெரும் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

அட்டவணை
அடுத்த ஆண்டு செப்டம்பர் 20ந் தேதி சீனத் தலைநகர் பீஜிங்கில் முதல் எலக்ட்ரிக் ஃபார்முலா - 1 கார் பந்தயங்கள் துவங்க உள்ளது. 2015ம் ஆண்டு ஜூன் வரை முதல் சீசன் பந்தயங்கள் நடைபெறும்.

தயாரிப்பு
முதல் ஆண்டு எலக்ட்ரிக் ஃபார்முலா 1 பந்தயங்களில் பயன்படுத்தப்பட இருக்கும் கார்கள் ஒரே மாதிரியாக இருக்கும். கால அவகாசம் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சீசன் போட்டியிலிருந்து ஒவ்வொரு அணியும் தனித்தனியாக கார்களை டிசைன் செய்து கொள்ள அனுமதிக்கப்படும்.

கார் டிசைன்
எலக்ட்ரிக் ரேஸ் கார்களுக்கான சேஸீ டல்லாரா நிறுவனத்திடமிருந்தும், பேட்டரி மற்றும் எஞ்சின் டிரான்ஸ்மிஷன் பாகங்கள் வில்லியம், மெக்லாரன் நிறுவனங்களிடமிருத்தும், பாடி வடிவமைக்கும் பொறுப்பை ரெனோ மற்றும் ஸ்பார்க் ரேஸிங் அணிகளும் மேற்கொள்ள உள்ளன.

கரூண் சந்தோக்
ஒவ்வொரு போட்டியிலும் இரு கார்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், ஒரு அணிக்கு இரண்டு வீரர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதில், ஒருவராக கரூண் சந்தோகம் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

மஹிந்திராவுக்கு பலன்
முதல் ஆண்டு பந்தயத்தின் மூலம் எலக்ட்ரிக் கார்களுக்கான தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு அடுத்து வரும் ஆண்டுகளில் சொந்தமாக எலக்ட்ரிக் ரேஸ் கார்களை தயாரிக்க மஹிந்திரா கணக்கு போட்டுள்ளது. தவிரவும், தனது ரேவா எலக்ட்ரிக் கார் தயாரிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் திட்டம் போட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








