வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தி... எக்ஸ்யூவியை மேம்படுத்தும் மஹிந்திரா!
கம்பீரமான டிசைனால் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துவிட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய மாடலாக வந்த மஹிந்திரா எக்ஸ்யூவியில் பல்வேறு குறைகள், பிரச்னைகள் இருப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து டீலர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, எக்ஸ்யூவியில் இருக்கும் முக்கிய பிரச்னைகளை சரிசெய்து வருகிறது மஹிந்திரா.
எக்ஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த குறைகளை நிவர்த்தி செய்து மேம்படுத்தப்படுத்தப்பட்ட மாடலாக களமிறக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது. எமது அனுபவத்திலும், வாடிக்கையாளர் கொடுத்த புகார்கள் அடிப்படையிலும் மஹிந்திரா எக்ஸ்யூவியில் இருக்கும் குறைகள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பிரேக்கில் பிரச்னைகள்
டிரைவ்ஸ்பார்க் தளத்தின் ஜோபோ குருவில்லாவின் டெஸ்ட் டிரைவ் அனுபவத்தில் எக்ஸ்யூவியின் பிரேக்குகள் சிறந்த தொழில்நுட்பங்களை பெற்றிருந்தாலும், போதிய திறன் கொண்டதாக இல்லை என்று தெரிவித்தார். மேலும், பிரேக் பிடித்தவுடன் உடனடி ரெஸ்பான்ஸ் இல்லை என்பதும் அவரது அனுபவ கூற்று. மேலும், பிரேக் பிடிக்கும்போது டிஸ்க்குகளிலிருந்து தேவையற்ற சப்தம் வருவதாகவும் அவர் கூறுகிறார்.

புதிய பிரேக்குகள்
எடிட்டர் ஜோபோ குருவில்லா மட்டுமல்ல எக்ஸ்யூவி வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் சிலரும் இதே பிரச்னையை டீலர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, எக்ஸ்யூவிக்கு புதிய பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்த மஹிந்திரா முடிவு செய்திருக்கிறது.

ஜிபிஎஸ் கோளாறு
எக்ஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் அம்சமாக இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவு இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. அத்தோடு, சில எக்ஸ்யூவி கார்களில் ஜிபிஎஸ் சிஸ்டமும் சரியாக வேலை செய்யவில்லை. வாய்மொழி உத்தரவு வசதியும், பார்க்கிங் சென்சார், புளுடூத் இணைப்பு ஆகியவற்றிலும் பிரச்னை என்பது வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த புகார்கள்.

புதிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம்
உயர்ரக காரை வாங்குவோர் முக்கிய அம்சமாக பார்ப்பது அதன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம். ஆனால், எக்ஸ்யூவியின் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் திருப்தியாக இல்லை என்பது புகார். இதையடுத்து, எக்ஸ்யூவிக்கு புதிய இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை பொருத்த மஹிந்திரா முடிவு செய்துள்ளது. மேலும், புதிய இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தில் கூடுதல் வசதிகளும் இருக்கக்கூடும்.

கிளட்ச் பிரச்னை
ஆட்டோமொபைல் தளங்களில் எக்ஸ்யூவியை பற்றி அதிகம் சொல்லப்பட்ட பிரச்னை இதுதான். எக்ஸ்யூவியில் கிளட்ச் மிகவும் கடினமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். மேலும், சில கார்களில் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டத்தில் பிரச்னை, சில கார்களில் குரூஸ் கன்ட்ரோல் இயங்கவில்லை என்பது போன்ற புகார்கள் இருக்கின்றன. எனவே, ஒட்டுமொத்த பிரச்னைகளையும் சரிசெய்து வாடிக்கையாளர்களின் மனம் நிறைவான கார் என்ற பெயரை தக்கவைக்கும் வகையில் எக்ஸ்யூவியை தற்போது மேம்படுத்தி வருகிறது மஹிந்திரா.

கூடுதல் விலை
அடுத்த மாதம் அல்லது மார்ச்சில் குறைகள் களையப்பட்ட புதிய எக்ஸ்யூவியை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. மேலும், மேம்படுத்தப்பட்டு வரும் எஸ்யூவியின் விலையும் சற்று கூடுதலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








