மாருதி ஜிப்ஸிக்கு விடை கொடுக்க ராணுவம் முடிவு!
மாருதி ஜிப்ஸிக்கு விடை கொடுக்க ராணுவம் முடிவு செய்துள்ளது. சிறந்த ஆப்ரோடு வாகனமாகவும், ராணுவ பயன்பாடுகளுக்கு சிறந்த வாகனமாகவும் இதுநாள் வரை ஜிப்ஸி இருந்து வருகிறது. இந்த நிலையில், ராணுவத்துக்கான போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், புதிய வாகனங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், ராணுவ பயன்பாட்டுக்காக வாங்கப்படும் வாகனங்களில் இனி குறைந்தபட்ச வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் என புதிய நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது. எஞ்சின் பவர் குறைந்தபட்சம் 120 எச்பி இருக்க வேண்டும் என்றும், டூவல் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், ஏசி ஆகியவற்றுடன் 800 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்பன போன்றவை ராணுவம் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த வசதிகளுக்கு ஏற்றதாக ஜிப்ஸி இல்லை. எனவே, ஜிப்ஸிக்கு விடை கொடுக்க ராணுவம் முடிவு செய்துள்ளது. படிப்படியாக ராணுவப் பயன்பாடுகளில் இருந்து ஜிப்ஸியை குறைக்கவும், புதிய ஜிப்ஸி வாகனங்களை வாங்குவதை தவிர்க்கவும் ராணுவம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, ராணுவ பயன்பாட்டுக்காக புதிதாக வாங்கப்பட உள்ள 30, 000 வாகனங்களை சப்ளை செய்வதற்கான ரூ.3,000 கோடி மதிப்புடைய ஆர்டரை பெறுவதற்கு டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் நிசான் நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன. டாடா சுமோ, டிஃபென்டர், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் நிசான் எக்ஸ்ட்ரெயில் ஆகியவை தற்போது போட்டியில் இறக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் இந்த வாகனங்களை ராணுவ அதிகாரிகள் மதிப்பீடு செய்ய உள்ளனர்.


Click it and Unblock the Notifications







