விரைவில் பார்வைக்கு வரும் மாருதியின் புதிய 800சிசி டீசல் கார்!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதியின் புதிய 800சிசி டீசல் கார் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மார்க்கெட்டின் மிகக்குறைந்த சிசி திறன் கொண்ட டீசல் காராக இது வெளியிடப்பட உள்ளது.
மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகியின் சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் 800சிசி டீசல் எஞ்சினுடன் இந்த புதிய கார் வர இருக்கிறது. எஸ்டீலோ, ஏ ஸ்டார் கார்களுக்கு மாற்றாக வரும் இந்த புதிய கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஞ்சின்
சுஸுகி வடிவமைத்துள்ள இந்த 2 சிலிண்டர் டீசல் எஞ்சின் புதிய குட்டிக் காரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதோடு, மாருதி அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மினி டிரக்கிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

மைலேஜ்
இந்த புதிய காரில் பொருத்தப்பட இருக்கும் புதிய 800சிசி டீசல் எஞ்சின் லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் தரும் என தகவல்கள் கூறுகின்றன.

அறிமுகம்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய குட்டிக் கார் முதலில் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடலில் மார்ச் மாதவாக்கில் விற்பனைக்கு வரும். இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு இறுதியில் இந்த காரின் 800சிசி டீசல் எஞ்சின் கொண்ட மாடல் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

ஏற்றுமதி
இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு இந்த புதிய கார் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

பெரும் போட்டி
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட கிராண்ட் ஐ10 காரை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதையடுத்து, 800சிசி டீசல் எஞ்சினுடன் நானோ காரை டாடா மோட்டார்ஸ் களமிறக்க உள்ளது. இதற்கு இடையில், மாருதியின் இந்த புதிய டீசல் கார் பார்வைக்கு வர இருப்பது வாடிக்கையாளர்களின் ஆவலை ஏகத்துக்கும் கிளறியுள்ளது.


Click it and Unblock the Notifications








