இந்தியாவில் 17 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தும் நிசான்
2016ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 17 புதிய கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மாருதி நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை டெல்லியில் நடந்த விழாவில் டட்சன் பிராண்டில் முதல் ஹேட்ச்பேக் காரை நிசான் அறிமுகம் செய்தது. இந்தநிகழ்ச்சியில் பேசிய நிசான் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

டட்சன் கோ
அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கும் டட்சன் காரை ரூ.3 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வர நிசான் திட்டமிட்டுள்ளது.

'பெட்' கட்டும் நிசான்
தற்போது இந்திய கார் மார்க்கெட்டில் 2 சதவீத பங்களிப்பை நிசான் பெற்றுள்ளது. ஆனால், அடுத்த இரு ஆண்டுகளில் 10 சதவீத(நிசான் 5 சதவீதம் + டட்சன் 5 சதவீதம்) மார்க்கெட் பங்களிப்பை பெற இருப்பதாக கார்லோஸ் கோஸ்ன் தெரிவித்தார்.

புதிய மாடல்கள்
மார்க்கெட் பங்களிப்பை அதிகரிப்பதற்காக 2016ம் ஆண்டுக்குள் டட்சன் பிராண்டில் 10 புதிய கார்களையும், நிசான் பிராண்டில் 7 புதிய கார் மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும் கார்லோஸ் கோஸ்ன் தெரிவித்தார்.

அனைத்தும் புதிது
புதிய மாடல்கள் குறித்து விளக்கமளிக்கையில், மேம்படுத்தப்பட்ட, ஆட்டோமேட்டிக் மற்றும் புதிய வேரியண்ட்களாக இல்லாமல் 17 கார்களும் புத்தம் புதிய மாடல்களாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

டீலர்ஷிப் விரிவாக்கம்
நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 30 டீலர்ஷிப்புகளை வைத்திருக்கும் நிசான் நிறுவனம் மார்க்கெட் பங்களிப்பை அதிகரிக்கவும், புதிய மாடல்களை விற்பனை செய்வதற்கு போதிய கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கும் வகையில், புதிய டீலர்ஷிப்புகளை அனைத்து மாநிலங்களிலும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளது. நடப்பு ஆண்டிற்குள் 100க்கும் அதிகமான டீலர்ஷிப்புகளுடன் செயல்பட நிசான் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாருதிக்கு நெருக்கடி
மாருதி ஆல்ட்டோ 800 காரை குறிவைத்து டட்சன் கோ காரை நிசான் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், புத்தம் புதிதாக 17 கார் மாடல்களை களமிறக்க இருப்பதாக நிசான் தெரிவித்துள்ளது மாருதி நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

மாருதி தலைவர் கருத்து
புதிய கார் நிறுவனங்களின் மார்க்கெட் பங்களிப்பு விகிதங்களை எதிர்கொள்ளும் விதமாக தங்களது பணியாளர்கள் புதிய சாதனைகளை படைக்க வேண்டியிருப்பதாக மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு ஓட்டப்பந்தயம் போன்றது. இதில், மார்க்கெட் லீடராக இருக்கும் எங்களது பங்களிப்பை உடைப்பதற்கு புதிய நிறுவனங்கள் முயல்வது இயற்கை. மார்க்கெட் பங்களிப்பை தக்கவைத்துக் கொள்வதே எங்களது முக்கிய பணி.

டாப்-3 ஆசை
டாப்-3 இடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து நிறுவனங்களும் முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. ஆனால், கையில் எத்தனை மாடல்கள் இருக்கின்றன; அதற்கான முதலீடுகள் எவ்வளவு என்பதெல்லாம் முக்கியம்," என்றும் ஆர்.சி.பர்கவா கூறினார்.

நிசானின் பெருந்திட்டம்
குறைந்த விலையில் கார்களை இறக்குவது மட்டுமில்லாமல், விற்பனைக்கு பிந்தைய சேவை, போதிய சர்வீஸ் கட்டமைப்பு வசதிகள் மற்றும் குறைந்த விலையில் உதிரிபாகங்கள் என அனைத்து அம்சங்களிலும் சிறப்பான பிராண்டாக நிசான் மற்றும் டட்சன் பிராண்டுகளை மாற்றவும்,நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் நிசான் திட்டமிட்டுள்ளதாக ஆட்டோமொபைல் வல்லுனர் ஒருவர் தெரிவித்தார்.

போட்டி எடுபடுமா?
இந்திய மண்ணில் நிசான் நிறுவனம் செயல்பாடுகளை துவங்கி 3 ஆண்டுகள்தான் ஆகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் செயல்பாடுகளை துவங்கியஃபோர்டு, ஹோண்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் இன்னமும் முழுமையாக 5 சதவீத மார்க்கெட் பங்களிப்பை பெறவில்லை. எனவே, நிசானின் கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








