கார் கடன் மாதத் தவணையிலிருந்து விடுதலை: புதிய கடன் திட்டம்
முன்பணம் மட்டுமே செலுத்தி காரை சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பை பிரபல விளம்பர நிறுவனம் அறிவித்துள்ளது. புனே நகரை சேர்ந்த ட்ரீமர்ஸ் மீடியா என்ற விளம்பர நிறுவனம் புதிய விளம்பர திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் 25 சதவீத முன்பணத்தை செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள மாதத் தவணைகளை ஓஓஎச் என்ற நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு மாதத் தவணையை செலுத்தும். 4ம் மற்றும் 5ம் ஆண்டு தவணைத் தொகையை காரின் உரிமையாளர் செலுத்த வேண்டும். இதற்கு கைமாறாக காரில் அந்த நிறுவனத்தின் விளம்பர வினைல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். 40 முதல் 60 சதவீதம் அளவுக்கு காரின் வெளிப்புறத்தில் வினைல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.

நிபந்தனைகள்:
இந்த புதிய விளம்பர திட்டத்தின்படி, காரின் ஆன்ரோடு விலை ரூ.6 லட்சத்திற்கு மேற்படாதவாறு இருக்க வேண்டும். மேலும், மாநகரங்களில் இருக்கும் கார்கள் மாதத்திற்கு 1,500 கிமீ., தூரமும், இரண்டாம் நிலையில் இருக்கும் கார்கள் மாதத்திற்கு 1,000 கிமீ முதல் 1,200 கிமீ தூரம் ஓட்ட வேண்டும் என்பது நிபந்தனை.
வரும் செப்டம்பரில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டில் 15,000 கார்களுக்கும், அடுத்த நிதி ஆண்டில் ஒரு லட்சம் கார்களையும் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வர ட்ரீமர்ஸ் மீடியா திட்டமிட்டுள்ளது.
ஆனால், இது நிறுவனங்கள் மற்றும் டாக்ஸி ஆபரேட்டர்களுக்கு மட்டும் சாத்தியப்படும் திட்டமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








