கொத்து கொத்தாக உயிர்களை பறிக்கும் ஓவர் ஸ்பீடு: வால்வோ வேகத்துக்கு முடிவு கிட்டுமா?
ஆந்திராவில் 45 உயிர்களை பலி வாங்கிய வால்வோ பஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஹைதராபாத்திலிருந்து ஷீரடி சென்ற வால்வோ பஸ் விபத்தில் சிக்கியதில் 40 பேர் பலியாகினர். இதுபோன்று, தொடர்ந்து பல வால்வோ பஸ்கள் அதிவேகத்தில் செல்லும்போது விபத்தில் சிக்குவது தொடர்கதையாகியுள்ளது.
சொகுசாகவும், விரைவாகவும் செல்லும் இதுபோன்ற சொகுசு பேருந்துகளில் கட்டணம் இருமடங்கு என்றாலும் கொடுத்து செல்கின்றனர் பயணிகள். ஆனால், அதிவேகம் கொண்ட இந்த பஸ்களில் பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் மாநில அரசுகள் உடனடியாக புதிய நடைமுறைகளை செயல்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

ஓவர் ஸ்பீடு
சாதாரண பஸ்கள் 8 மணி நேரத்தில் செல்லும் தூரத்தை வால்வோ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் பஸ்கள் 5 மணி நேரத்தில் கடந்து விடுகின்றன. மணிக்கு 130 கிமீ வேகம் வரை சாதாரணமாக இயக்குகின்றனர். விபத்துக்குள்ளான பஸ்சும் 120 கிமீ வேகத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு முதலில் முடிவு கட்ட வேண்டியது அவசியம்.

ரோடு இருக்கா?
மேல் தட்டு நாட்டு சாலை நிலைகளுக்கு ஏற்ப வால்வோ, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற பஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. அதிக பவர்ஃபுல் எஞ்சின் கொண்ட சொகுசு பஸ்களுக்கு ஏற்ற வகையிலும், வளர்ந்த நாடுகளுக்கு இணையான சாலை கட்டமைப்பு வசதிகளும் இங்கு இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது. எனவே, இதற்கு தகுந்தாற்போல் வேகக்கட்டுப்பாட்டு விதிகளை சாலையில் அமலுக்கு கொண்டு வருவது அவசியம்.

அனுபவமின்மை
பல வால்வோ பஸ்களில் ஒரே ஒரு டிரைவரை போட்டும்,, அனுபமில்லாத டிரைவர்களை வைத்தும் இயக்குகின்றனர். சில சமயம் நாளுக்கு ஒரு டிரைவரை வைத்து இயக்குகின்றனர். இதனால், பஸ்சின் கட்டுப்பாடு குறித்து தெரியாமல் மிதித்தால் பறக்கிறது என்ற ரீதியில்தான் அவர்கள் ஓட்டுகின்றனர். உள்ளே இருக்கும் பயணிகள் குறித்து அவர்களுக்கு கவலை இல்லாதது போன்றே செயல்படுகின்றனர். எனவே, அதிவேகத்தில் செல்லும்போது அவசர சமயங்களில் அவர்களால் பஸ்சை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. பலர் போக்குவரத்து விதிகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களாவே இருக்கின்றனர். இவர்களுக்கு சிறப்பு டிரைவிங் பயிற்சி மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய பயிற்சிகளை அளிப்பதும் அவசியமாகிறது.

ரீட்ரேட்
பல நெடுந்தூர பஸ்களில் தேய்ந்து போன டயர்களை மாற்றாமல் ரீட்ரேட் போட்டு ஓட்டுகின்றனர். இதுவும் சரியான கிரிப் கிடைக்காமல் பஸ் விபத்துக்குள்ளாவதற்கு வழி வகுத்து விடுகிறது.

பராமரிப்பு
இரவு முழுவதும் இயங்கும் பஸ்சை பகல் வேளைகளிலும் நாள் சுற்றுலாவுக்கு பயன்படுத்துகின்றனர். ஒரு கோடி வரை முதலீடு செய்ததை குறுகிய காலத்தில் எடுப்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். இதனால், பஸ்சின் ஆயுட்காலம் வெகுவாக குறைவதுடன், பராமரிப்பிலும் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வேகக்கட்டுப்பாடு
எளிதான பிக்கப்புடன் அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்ட வால்வோ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் பஸ்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது அவசியம். வேகக்கட்டுப்பாட்டு கருவியை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே இதற்கு மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.

எச்சரிக்கை வசதி
பல சமயங்களில் இதுபோன்ற விபத்துக்கள் இரவு நேரங்களில் நடக்கின்றன. விபத்தின்போது பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் பல எண்ணிக்கை அதிகமிருக்கிறது. எனவே, குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் விபத்து அல்லது தீப்பிடிக்கும் சமயங்களில் எச்சரிக்கை அலாரம் பொருத்துவதும் அவசியம். இந்த அடிப்படை விஷயங்களை உடனடியாக அமல்படுத்துவதற்கு போக்குவரத்து துறை உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

ஓவர் லோடு
விபத்துக்குள்ளான வால்வோ பஸ்சில் 4 டன் துணி மூட்டைகளும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 44 பேர் மட்டுமே பயணம் செய்யும் வசதி கொண்ட அந்த பஸ்சில் கூடுதலாக 5 பேர் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். இதுபோன்று, கூடுதல் சுமை மற்றும் பயணிகளால் பஸ்சின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டும் கட்டுப்பாட்டை இழக்கின்றன. எனவே, பயணிகள் ஏற்றிச் செல்வதற்கான பஸ்சில் ஒரு டிரக்கில் எடுத்துச் செல்லும் அளவுக்கு கூடுதல் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
வால்வோ பஸ்களின் சேஸிங்
நாம் சாலையில் செல்லும்போது அன்றாடம் காணும் நிகழ்வுதான் இது. இரண்டு வால்வோ பஸ்கள் அதிவேகத்தில் சேஸிங் செய்யும் காட்சியை பாருங்கள். மணிக்கு 125 கிமீ வேகத்தில் செல்லும் இந்த பஸ்களை அவசர சமயத்தில் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? என்பது டிரைவர்களுக்கே வெளிச்சம்.

முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பல குடும்பங்களை ஒரு வினாடியில் நிர்கதியாக்கும் இதுபோன்ற வால்வோ பஸ்கள் பெரும்பாலும் அதிவேகத்தால் மனித தவறுகளாலேயே நடக்கின்றன. இதனை தடுக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற துயர நெஞ்சு கனக்கும் சம்பவங்களை நிகழாதிருக்கவும் அரசும், சம்பந்தப்பட்ட துறையினரும் நடவடிக்கை எடுப்பது அவசர அவசியமானது.


Click it and Unblock the Notifications








