இந்தியாவுக்கு புதிய குட்டிக் காரை வடிவமைக்கும் ரெனோ!

டஸ்ட்டர் கொடுத்த உற்சாகத்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது ரெனோ. அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 8 கார்களை தனது போர்ட்போலியோவில் கொண்டு வருவதற்கு திட்டம் போட்டுள்ளது.
இதற்காக, புத்தம் புதிய சிறிய காரை இந்திய மார்க்கெட்டுக்காக அந்த நிறுவனம் வடிவமைத்து வருகிறது. ஏ என்ட்ரி என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்பட்டு வரும் இந்த புதிய குட்டிக் காரில் 800சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். சென்னையில் உள்ள ஆராய்ச்சி மையத்தில்தான் இந்த புதிய கார் டிசைன் செய்யப்படுகிறது.
இதுகுறித்து ரெனோவின் சிஓஓ., கார்லோஸ் தவேர்ஸ் கூறுகையில்," புதிய குட்டிக் காரை வடிவமைக்கும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. இந்த மாடல் எங்களது எதிர்கால வர்த்தக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும். அதேவேளை, அனைத்து நிறுவனங்களும் சிறிய கார் மார்க்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
எனவே, எங்களது தயாரிப்பு பிற மாடல்களிலிருந்து கூடுதல் சிறப்புகளை கொண்டதாகவும், வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்," என்றார்.
இந்த புதிய காரை அறிமுகம் செய்வதற்கான காலக்கெடு குறித்து அவர் தகவல் தெரிவிக்கவில்லை. அதேவேளை, இந்த காரை வடிவமைக்கும் பணிகளை 2015ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய ரெனோ காலக்கெடு வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








