ஃபேபியா உற்பத்தியை நிறுத்த ஸ்கோடா முடிவு

கடந்த 2008ம் ஆண்டில் ஸ்கோடா ஃபேபியா ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. துவக்கம் முதலே விற்பனையில் பெரிய அளவில் இந்த கார் சாதிக்க தவறி வந்தது.
வெளிநாடுகளில் இருந்து பெரும்பான்மையான பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிளிங் செய்யப்படுவதால், இதன் பேஸ் வேரியண்ட் ரூ.6 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நம் நாட்டு வாடிக்கையாளர் மத்தியில் இந்த கார் எடுபடவில்லை.
கடந்த 2012-13ம் நிதி ஆண்டில் வெறும் 3,343 ஃபேபியா கார்கள் மட்டுமே ஷோரூமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மாதம் வெறும் 115 ஃபேபியா கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. எனவே, இந்த கார் உற்பத்தி நிறுத்தப்படுவதாக வெளியான செய்தி ஆச்சரியமளிப்பதாக இல்லை.
இறக்குமதி செய்யப்பட்ட பாகங்கள் இருக்கும் வரை இந்த கார் உற்பத்தி செய்யப்படும். அதன் பிறகு இந்த காரின் உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட ஸ்கோடா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், டீலர்களில் தேங்கி இருக்கும் கார்களுக்கு தள்ளுபடிகளை கொடுத்து இருப்பை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, ஃபேபியாவுக்கு மாற்று காரை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து ஸ்கோடா இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








