ஆகஸ்ட்டிலும் கார் விற்பனையில் சரிவு: விழி பிதுங்கும் நிறுவனங்கள்
உள்நாட்டு கார் நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திராவின் கார் விற்பனையில் பலத்த அடி விழுந்துள்ளது. கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் கார் விற்பனை 33 சதவீதமும், மஹிந்திராவின் விற்பனை 28 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன.
அதேவேளை, மாருதி கார் நிறுவனத்தின் விற்பனை இரு மடங்கு உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த தொழிலாளர் வேலை நிறுத்தம் மற்றும் வன்முறை சம்பவத்தால் கார் விற்பனை முற்றிலும் முடங்கியதே காரணமாக கூறலாம்.

கார் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதால் டாடா, மஹிந்திரா, மாருதி உள்ளிட்ட அனைத்து கார் நிறுவனங்களும் உற்பத்தியை வெகுவாக குறைத்து விட்டன.
மாருதி சுஸுகி நிறுவனம் தற்காலிக தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகிறது. மஹிந்திராவும் கடந்த இரு மாதங்கலில் 1,000 தற்காலிக தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலியும் கார் மார்க்கெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இறக்குமதி பாகங்களுக்கு கூடுதல் தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து, கார் விலையை பெரும்பாலான நிறுவனங்கள் உயர்த்த திட்டமிட்டுள்ளன.
ஒட்டுமொத்தத்தில் கார் மார்க்கெட்டுக்கு தற்போது போதாத காலமாக உள்ளது. பண்டிகை காலத்தில் கார் விற்பனையில் சிறிது முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் புதிய மாடல்களை தயாரிப்பாளர்கள் அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








