மார்ச்சில் டீசல் நானோ கார்: 35- 40 கிமீ மைலேஜ் தருமாம்!!
அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் டீசல் நானோ கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலில் இதனை டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கார்ல் ஸ்லிம் இதனை தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை எகிறி வரும் இந்த வேளையில் கார் வைத்திருப்பவர்களின் பாடு திண்டாட்டமாகி வருகிறது. இந்த நிலையில், அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட காராக வரும் டீசல் நானோ வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறப்பான தேர்வாக இருக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினரின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

புதிய டீசல் எஞ்சின்
டாடாவின் டைகோர் எஞ்சினை அடிப்படையாகக் கொண்டு நானோவுக்கான புதிய 800சிசி எஞ்சின் வடிவமைக்கப்பட்டு வருகிறது. டாடா எஞ்சினியர்களுடன் இணைந்து பாஷ் நிறுவனத்தின் பொறியாளர்களும் நானோ டீசல் எஞ்சினை வடிவமைத்து வருகின்றனர். மேலும், டாடா நானோதான் இந்திய மார்க்கெட்டின் சிறிய டீசல் காராகவும் இருக்கும்.

பவர்
டர்போசார்ஜர் துணைடுயன் டீசல் நானோ காரின் எஞ்சின் 40 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

மைலேஜ்
லிட்டருக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரை மைலேஜ் தரும் என்பதே எதிர்பார்ப்புக்கு அதிக காரணம். மேலும், இதே மைலேஜ் விபரங்கள் அறிவிக்கப்பட்டால் இந்தியாவின் மிக அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையும் நானோவுக்கு கிடைக்கும்.

புதிய மாடல்
வடிவமைப்பில் மாறுதல்களோடு டீசல் நானோ வருகிறது. முன்புற, பின்புற பம்பர்களின் டிசைன் மாற்றப்பட்டிருக்கும்.

சிஎன்ஜி மாடல்
டீசல் நானோவுக்கு முன்பாக சிஎன்ஜியில் இயங்கும் நானோ கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இ- மேக்ஸ் என்ற பெயரில் வரும் இதுவும் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாக இருக்கும்.

ஒரே நம்பிக்கை
பெரும் கனவுகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட நானோ கார் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில், சிஎன்ஜி மற்றும் டீசல் நானோ மாடல்கள் மூலம் நானோ வரலாற்றில் வசந்தம் வீசும் என்ற நம்பிக்கையுடன் டாடா மோட்டார்ஸ் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications








