10 நாளில் 10,218 கிமீ பயணம்... மீண்டும் நானோவின் கின்னஸ் சாதனை

மார்ச் 21ந் தேதி கன்னியாகுமரியில் பயணத்தை துவங்கிய நானோ கார் நாட்டின் தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு என அனைத்துப் பகுதிகளையும் தொட்டுவிட்டு கடந்த மார்ச் 30ந் தேதி பெங்களூரில் பயணத்தை நிறைவு செய்தது. மொத்தம் 10,218 கிமீ தூரத்தை 10 நாட்களில் கடந்தது நானோ கார்.
இதன்மூலம், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் ஒரே பயணத்தில் 8,046 கிமீ தூரம் பயணம் என்பதே கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது.
பெங்களூரை சேர்ந்த ஆட்டோமொபைல் ஆர்வலரான ஸ்ரீகாருண்ய சுப்ரமணியம் என்பவரும், அவரது குழுவினரும்தான் நானோ காரை ஓட்டி இந்த சாதனையை படைத்துள்ளனர்.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் தலைவர் ரஞ்சித் யாதவ் கூறுகையில்," உறுதி, நம்பகத்தன்மை, சிறப்பான தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் உலக ஆட்டோமொபைல் வரைபடத்தில் இந்தியாவின் பெருமையை நானோ பரைசாற்றியுள்ளது. எனவே, நானோவின் சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக இந்த பயணம் அமைந்துள்ளது," என்றார்.
இந்த சாதனையை படைத்த ஸ்ரீகாருண்ய சுப்ரமணியம் மற்றும் குழுவினருக்கு நடந்த பாராட்டு விழாவில் தமிழகத்தை சேர்ந்த ஃபார்முலா ஒன் வீரர் நரேன் கார்த்திகேயன் கலந்துகொண்டு பாராட்டினார். மேலும், கேரளாவை சேர்ந்த மற்றொரு ஆட்டோமொபைல் ஆர்வலரான தாமஸ் சாக்கோ எழுதிய அடாப் தி வேர்ல்டு என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.
தாமஸ் சாக்கோ நானோ காருடன் 78 நாட்கள் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகக் குறைந்த விலை கார் என்ற பெருமையுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் நானோ கார் ஏற்கனவே இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக நானோ கார் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








