விபத்துக்களை தவிர்க்கும் ஆட்டோ பைலட் சிஸ்டம்: டொயோட்டா அறிமுகம்
விபத்துக்களை தவிர்க்க உதவும் கார்களுக்கான ஆட்டோ பைலட் எனப்படும் காருக்கான தானியங்கி கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தை பல்வேறு நிறுவனங்கள் உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகின்றன. கூகுள், நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கான முயற்சிகளில் ஏற்கனவே பல படிகளை கடந்துவிட்டன.
இந்த நிலையில், ஆட்டோ பைலட் சிஸ்டத்தை டொயோட்டாவும் உருவாக்கியுள்ளது. தற்போது சோதனை கட்டங்களில் முன்னேற்றம் கண்டிருக்கும் இந்த புதிய தொழில்நுட்பத்தை எதிர்காலத்தில் அனைத்து கார்களிலும் கொண்டு வருவதற்கான பெரும் திட்டத்துடன் டொயோட்டா களமிறங்கியுள்ளது.

லெக்சஸில் சக்சஸ்!!
டொயோட்டாவின் லெக்சஸ் சொகுசு கார் பிராண்டின் லெக்சஸ் எல்எஸ் காரில் இந்த ஆட்டோ பைலட் சிஸ்டம் பொருத்தப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிரத்யேக கருவிகள்
சாலையின் குறுக்கே வரும் பாதசாரிகள், விலங்குகள் மற்றும் அபாயகரமான பொருட்கள் குறித்து முன்கூட்டியே கண்டுணர்ந்து எச்சரிக்கும் விதத்தில் சென்சார், கேமரா மற்றும் இதற்கான கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்களின் உதவியுடன் இந்த தொழில்நுட்பம் செயல்படுகிறது.

முதலில் எச்சரிக்கை
சாலையின் குறுக்கே வரும் பாதசாரிகள் மற்றும் விலங்குகள் குறித்து முன்கூட்டியே ஆட்டோ பைலட் சிஸ்டம் டிரைவருக்கு எச்சரிக்கை கொடுக்கும்.

ஆபத்பாந்தவன்
ஒருவேளை, டிரைவர் முன்னேறி செல்ல முயன்று பாதசாரிகள் மீதோ அல்லது முன்னால் செல்லும் கார்கள் மீதோ மோதும் நிலை ஏற்படும்போது ஆட்டோ பைலட் சிஸ்டம் காரின் கட்டுப்பாட்டை தானே எடுத்துக் கொள்ளும். அதாவது, காரின் வேகத்தை குறைப்பதோட, ஸ்டீயரிங் மற்றும் பிரேக் கட்டுப்பாட்டை கம்ப்யூட்டரே மேற்கொள்ளும்.

கூல்...
பாதசாரிகள் மீது மோதும் நிலை ஏற்படும்போது காரை பிரேக் பிடித்து நிறுத்த முயலும். பிரேக்கிங் தொலைவு குறைவாக இருந்தால், காரை தானியங்கி ஸ்டீயரிங் செய்து திருப்பி விடும். எனவே, விபத்தை தடுக்க உதவும் முக்கிய தொழில்நுட்பமாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது வருகிறது?
இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கார்களை டொயோட்டா விற்பனைக்கு கொண்டு வருகிறது. மனித தவறுகளால் நடைபெறும் விபத்துக்களை இந்த புதிய ஆட்டோ பைலட் சிஸ்டம் மூலம் வெகுவாக குறையும் என்று டொயோட்டா நம்பிக்கை தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








