ஃபார்முலா-1ஐ தொடர்ந்து இந்தியாவில் டிரக் பந்தயத்தை நடத்தும் டாடா!
அடுத்த ஆண்டு இந்தியாவில் டிரக்குகளுக்கான பந்தயத்தை நடத்துவதற்கான முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக ஃபார்முலா- 1 கார் பந்தயங்கள் இந்தியாவில் நடத்தப்பட்டன. அடுத்த ஆண்டு இந்தியாவில் ஃபார்முலா-1 கார் பந்தயம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் டிரக்குகளுக்கான பந்தயத்தை முதல்முறையாக இந்தியாவில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

பிரபலம்
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் டிரக்குளுக்கான பந்தயங்கள் மிகவும் புகழ்பெற்றவை. நாஸ்கார் கேம்பிங் வேர்ல்டு டிரக் சீரிஸ் உள்ளிட்ட பிரபல டிரக் பந்தயங்களுக்கு சர்வதேச தானுந்து கூட்டமைப்பு (FIA) அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிக்கப் டிரக் மற்றும் கனரக டிரக் போன்ற ரகங்களில் அங்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அறிவிப்பு
தேசிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் விக்கி சந்தோக் இந்த தகவலை வெளியிட்டார். விரைவில் இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடுதளத்தில் மட்டும்...
டிரக் பந்தயம் டெல்லி அருகே நொய்டாவில் அமைந்துள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் ஓடுதளத்தில் வைத்து நடத்தப்பட உள்ளதாக விக்கி சந்தோக் தெரிவித்துள்ளார்.

டிரக்குகள் சோதனை
டிரக் பந்தயங்களில் பயன்படுத்துவதற்காக 12 பிரைமா கனரக டிரக்குகள் ஜாம்ஷெட்பூரில் வைத்து சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், திருப்திகரமான முடிவுகள் வந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒரே சுற்று
அடுத்த ஆண்டு துவங்கும் முதலாவது டிரக் பந்தய போட்டியை ஒரே சுற்றில் முடிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் பல்வேறு சுற்றுகளாக நடத்த முடிவு செய்துள்ளது.

வீரர்கள்
இந்த பந்தயங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்குகொள்வார்கள் என்றும் தெரிவிகக்கப்பட்டுள்ளது.

பிரத்யேக வசதிகள்
பந்தயத்தில் பயன்படுத்தப்படும் டிரக்குகளில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். பிரத்யேக எரிபொருள் தொட்டி, தீயணைப்பு கருவி, பிரேக்குகளுக்கான குளிர்விப்பு சாதனங்கள், பக்கெட் இருக்கைகள், ரோல் கேஜ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஆக்சஸெரீஸ்களை கொண்டிருக்கும். மேலும், டிரெய்லர்கள் இணைக்கப்படாத 6 சக்கரங்களை கொண்ட ஜீப் மட்டுமே பயன்படுத்தப்படும்.

வரவேற்பு
அடுத்த ஆண்டு ஃபார்முலா- 1 கார் பந்தயங்கள் நடைபெறாது என்ற ஏமாற்றத்தில் இருக்கும் ரேஸ் பிரியர்களை இந்த டிரக் பந்தயம் வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் இந்த டிரக் பந்தயம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








