தமிழகத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்களில் கருப்புப் பெட்டி!
தமிழகத்தில் இயக்கப்படும் அனைத்து வால்வோ பஸ்களிலும் கருப்புப் பெட்டி சாதனம் பொருத்தப்பட உள்ளது. வால்வோ மட்டுமின்றி அனைத்து தொலைதூர பஸ்களிலும் கருப்புப் பெட்டி மற்றும் இதர பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
சென்னையில் தமிழக போக்குவரத்து ஆணையரை வால்வோ அதிகாரிகள் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது பஸ்களில் சிறப்பு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும்படி தமிழக அரசு சார்பில் சில அம்சங்கள் முன் வைக்கப்பட்டன. இதனை வால்வோ அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வால்வோ பஸ்களில் ஏற்படுத்தப்பட இருக்கும் சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கருப்புப் பெட்டி
விமானங்களில் இருப்பது போன்று வால்வோ பஸ்களில் கருப்புப் பெட்டி போன்ற பயணப் பதிவு கருவியை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கருவி தீப்பிடிக்காத தன்மை கொண்டது. ஒருவேளை விபத்தில் பஸ் சிக்கினால், அதற்கான காரணத்தை எளிதாக கண்டறிவதற்கு இந்த கருவி பயன்படும்.

ஸ்பீடு கவர்னர்
ஸ்பீடு கவர்னர் எனப்படும் வேகக் கட்டுப்பாட்டு சாதனைத்தையும் பொருத்த வால்வோ அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதன்மூலம், மணிக்கு 85 கிமீ மேல் வேகத்தை பஸ் தாண்ட முடியாதபடி கட்டுப்படுத்தப்படும்.

ரேடியம் ஸ்டிக்கர்கள்
பஸ்சில் அவசரப் பாதைகள் கொண்ட கண்ணாடிகள் மற்றும் வழிகளை எளிதில் அடையாளும் காணும் விதமாக ரேடியம் ஸ்டிக்கர்களை ஒட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலகு கண்ணாடி
அனைத்து ஜன்னல்களிலும் எளிதில் உடைக்கும் வசதி கொண்ட கண்ணாடிகளையே பொருத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், விபத்து நிகழும்போது பயணிகள் தங்கள் இருக்கை பக்கம் உள்ள கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு எளிதாக வெளியேற முடியும். மேலும், கண்ணாடிகளை உடைப்பதற்காக கூடுதலாக சுத்தியல்களை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது உள்ள 4 சுத்தியல்களை 8 ஆக அதிகரிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வீடியோ
பஸ் கிளம்புவதற்கு முன்னதாக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வழிகாட்டு முறைகள் குறித்த வீடியோவை அனைத்து பஸ்களின் டிவி திரைகளில் போட்டு காண்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு டிரைவர்கள்
நெடுந்தூர பஸ்களில் 150 கிமீ.,க்கு ஒரு டிரைவர் என்ற முறையில் பஸ்களை இயக்கவும், இரண்டு டிரைவர்களை பயன்படுத்த வேண்டும் என்று டிராவல்ஸ் நிறுவனங்களை வால்வோ தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வால்வோ மட்டுமல்ல...
வால்வோ மட்டுமின்றி அசோக் லேலண்ட், டாடா, டெய்ம்லர் என அனைத்து பஸ்களிலும் கருப்புப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவிகளையும் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகளையும் செய்து தர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் டி.பிரபாகர் ராவ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








