எலக்ட்ரிக், ஹைபிரிட் கார்களுக்கு ரூ.14,000 கோடி மானியம்: மத்திய அரசு முடிவு
எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக ரூ.14,000 கோடியில் மாபெரும் மானியத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் செயலற்ற நிலையில் இருக்கிறது. இதனால், எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார் மற்றும் இருசக்கர வாகன விற்பனை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்தியில் அமைந்திருக்கும் புதிய அரசு விரைவில் எலக்ட்ரிக் கார்களுக்கான மானியத் திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது. இந்த மானியத் திட்டத்துக்கு ரூ.14,000 கோடியை ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2020ம் ஆண்டு வரை 6 ஆண்டுகளுக்கு இந்த தொகையை ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முழுமையான எலக்ட்ரிக் கார்களுக்கு விலையில் 35 சதவீதத்தை மானியமாகவும், 15 கிமீ ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 25 சதவீத மானியத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைபிரிட் வாகனங்களை பொறுத்தவரையில் அதிக ரேஞ்ச் வழங்கும் மாடல்களுக்கு 25 சதவீதம் மானியமாகவும், குறைந்த ரேஞ்ச் கொண்ட ஹைபிரிட் வாகனங்களுக்கு 15 சதவீத மானியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வரும்போது புதிய எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.
இதேபோன்று விற்பனையும் வெகுவாக வளர்ச்சி பெறும் என நம்பப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.60,000 கோடி மதிப்புடைய எரிபொருளை சேமிக்க முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








