ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!
நம் நாட்டு வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் கார் ரகத்தில், 4 மீட்டருக்கும் குறைவான செடான் கார்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த செக்மென்ட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை கருதி, பல முன்னணி நிறுவனங்கள் புதிய மாடல்களை தொடர்ந்து வரிசை கட்டி வருகின்றன.
அந்த வகையில், நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது புதிய காம்பெக்ட் செடான் கார்தான் எக்ஸ்சென்ட். இந்த மார்க்கெட்டில் விற்பனையில் முன்னணியில் இருந்து வரும் மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களைவிட கூடுதல் சிறப்பம்சங்கள் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் எக்ஸ்சென்ட் வந்துள்ளது. போட்டியாளர்களைவிட்டு வாடிக்கையாளர்கள் இந்த காரை தேர்வு செய்வதற்கான சில முக்கிய விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

பிராண்டு நம்பகத்தன்மை
ஹூண்டாய் நிறுவனம் மார்க்கெட்டில் முன்னிலை பெற்றதுக்கு முக்கிய காரணம் போட்டியாளர்களைவிட சிறப்பான டிசைன் மற்றும் தரம் முக்கிய காரணம். மேலும், ஹூண்டாயின் வெற்றிகரமான மாடல்களாகிய ஐ10 மற்றும் ஐ20 கார்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளன. சிறந்த எரிபொருள் சிக்கனம், சிறப்பான வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுடன் இதுவரை ஹூண்டாய் கார்கள் பெரிய பிரச்னைகளுக்காக ரீகால் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி
எந்தவொரு வாகனமும் வெற்றி பெறுவதற்கு தோற்றக் கவர்ச்சி முக்கியமானதாகும். இதுவரை மார்க்கெட்டில் இருக்கும் பெரும்பாலான ஹூண்டாய் கார் மாடல்களின் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு முக்கிய காரணம். அதேபோன்று, புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரும் டிசைனில் மிகச்சிறப்பானதாகவே இருக்கிறது. மாருதி டிசையரின் டிசைனுடன் ஒப்பிடும்போது, ஹூண்டாய் எக்ஸ்சென்ட் டிசைன் நிச்சயம் கவர்வதாகவே இருக்கிறது. குறிப்பாக, மாருதி டிசையரின் பின்புற டிசைன் இதுவரை பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால், புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரின் பின்புற டிசைன் சிறப்பாக இருக்கிறது.

பெட்ரோல் எஞ்சின்
போட்டியாளர்களை போன்றே புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் இதர மாடல்களில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் எரிபொருள் சிக்கனத்திற்கும், நம்பகத்தன்மைக்கும் பெயர் பெற்றது. அதே எஞ்சின்தான் இந்த காரின் பெட்ரோல் மாடலில் செயல்புரிகிறது. மேலும், கிராண்ட் ஐ10 காரைவிட ஒரு பிஎஸ் பவரையும், 20 என்எம் டார்க்கையும் கூடுதலாக வழங்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது.

டீசல் எஞ்சின்
இதேபோன்று, கிராண்ட் ஐ10 கார் மூலம் இந்திய மார்க்கெட்டுக்கு அறிமுகமான 1.1 லிட்டர் 3 சிலிண்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 24.4 கிமீ மைலேஜை தரும் என்பது கூடுதல் பலமாக இருக்கிறது. நகர்ப்புறத்தில் சிறப்பான செயல்திறனை காட்டும் இந்த எஞ்சின் அதிர்வுகளை கூடுதலாக காட்டினாலும், நெடுஞ்சாலையில் சிறப்பான பெர்ஃபார்மென்சை வழங்குகிறது.

கியர் பாக்ஸ்
பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மாடல்களிலும், டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடலிலும் கிடைக்கிறது. இந்த கியர்பாக்ஸ் மாடல்கள் போட்டி மாடல்களை ஒப்பிடும்போது, மிக இலகுவாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்கிறது. நகர்ப்புற போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்க எண்ணுபவர்களுக்கு, ஏதுவாக ஆட்டோமேட்டிக் மாடலை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

விலை ஒப்பீடு
ஒப்புக்கொள்ளக்கூடிய சொகுசு வசதிகளுடன் கூடிய பேஸ் மாடல் ரூ.4.66 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. இது மாருதி டிசையரைவிட ரூ.19,000 வரையிலும், ஹோண்டா அமேஸ் காரின் பேஸ் மாடலைவிட ரூ.33,000 வரையிலும் குறைவு. மேலும், பெட்ரோல், டீசல் மாடல்களை வாடிக்கையாளர்களின் விருப்பம், வசதியை பொறுத்து தலா 3 வேரியண்ட்டுகளில் தேர்வு செய்து கொள்ளலாம். ஆட்டோமேட்டிக் மாடலை 2 வேரியண்ட்டுகளில் தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

கூடுதல் சாதகங்கள்
மொத்தத்தில் போட்டியாளர்களைவிட டிசைன், நம்பகத்தன்மை, விலை, வசதிகள், சிறப்பான சர்வீஸ் நெட்வொர்க் என ஹூண்டாய் எக்ஸ்சென்ட் பலபடிகள் முன்னே நிற்கிறது.


Click it and Unblock the Notifications








