ஏர்பேக் ஏம்பா விரியலை... நீங்க காரை 'ப்ராப்பரா' மோதலை... கேரள டீலரின் பதில்!
கார் வாங்கும்போது ஏர்பேக், ஏபிஎஸ் உள்ள வேரியண்ட் தேர்வு செய்து வாங்குபவர்கள் கூடுதல் பாதுகாப்பு கருதியே. விலை கூடுதலானாலும் பரவாயில்லை என்று பலர் இப்போது ஏர்பேக் பொருத்தப்பட்ட கார்களை வாங்க முடிவு செய்கின்றனர். ஆனால், கேரளாவில் சமீபத்தில் நடந்த விபத்து இந்த கூடுதல் பாதுகாப்பு ஆக்சஸெரீகளின் செயல்பாடு மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த அருண் நாயர் என்பவர் தனது டொயோட்டா எட்டியோஸ் காரில் எர்ணாகுளம்- ஆலப்புழா நெடுஞ்சாலையில் சமீபத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார். அவரது கார் மற்றொரு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், அருண் நாயரும் பக்கத்தில் இருந்தவரும் படுகாயமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் இருவாரங்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்தநிலையில், அருண் நாயரின் டொயோட்டா எட்டியோஸ் காரில் ஏர்பேக் இருந்தும் அது விரிவடையவில்லை. அதனால்தான் அதிக காயம் ஏற்பட்டதாக அவர் டீலரில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், டீலரில் தெரிவித்த பதில்தான் அவருக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஏர்பேக் விரிவடையாததற்கு, உங்களது கார் சரியாக மோதவில்லை என்று பதில் கூறியுள்ளனர். இதனால் கடுப்பாகிப் போன அருண் நாயர் ஏர்பேக் சரியாக விரிவடைய நான் எவ்வாறு மோத வேண்டும் என்று டீலரில் இருந்த நிர்வாகியை ஒரு பிடி பிடித்துள்ளார். இந்த காரை எவ்வாறு நம்பி மீண்டும் ஓட்டிச் செல்வது என்றும் கேட்டுள்ளார்.
ஆனால், அந்த டொயோட்டா டீலர் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார். இந்தநிலையில், விபத்தில் காயமடைந்த இருவரும் சீட் பெல்ட் அணியாமல் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதனை அருண் நாயர் மறுத்துள்ளார். சீட்பெல்ட் அணிந்து சென்றதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு துணைத்தலைவர் என்.ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஏர்பேக் தொழில்நுட்பம் மற்றும் இதர விஷயங்களை விளக்கியுள்ளார். விபத்தில் சிக்கிய காரின் படங்களையும், அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

ப்ராப்பரா மோதினால்தான் பலன்!
ஓட்டுனருக்கான எஸ்ஆர்எஸ் ஏர்பேக் மற்றும் முன்புற பயணிக்கான ஏர்பேக்குகள் தொழில்நுட்ப ரீதியில் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே விரிவடையும். உதாரணமாக, 20- 300 கிமீ வேகத்தில் செல்லும்போதும், நேரடியாகவோ அல்லது 30 டிகிரி கோணத்தில் முன்புற பகுதி மோதினாலும் எஸ்ஆர்எஸ் ஏர்பேக் விரிவடையாது. பக்கவாட்டில் அல்லது பின்புறத்தில் மோதல் ஏற்பட்டாலும் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள் விரிவடையாது.

மோதல் வேகம்
மோதல் வேகத்தை பொறுத்தே ஏர்பேக் விரிவடையும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறது. ஒருவேளை, மோதலின் தாக்கம் அதிகமிருப்பதை ஏர்பேக் கட்டுப்பாட்டு சாதனம் உணர்ந்தால் உடனடியாக ஏர்பேக் விரிவடைய செய்யும்.
அனைத்து விபத்து சூழ்நிலைகளிலும் ஏர்பேக் விரிவடையாது. ஏனெனில், சில வேளை அது ஓட்டுனர் அல்லது பயணிக்கு காயத்தை ஏற்படுத்திவிடக்கூடும். இதன்காரணமாகவே, விபத்து ஏற்பட்டாலும் சில நேரங்களில் ஏர்பேக் விரிவடையாது. இதனால், ஏர்பேக்கில் குறை இருப்பதாக சொல்ல முடியாது.

நிரந்தர ஆக்சஸெரீ
சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு இதுதொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளோம். அவருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை உணர்ந்து கொண்டுள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதற்காகவே எட்டியோஸ் காரில் ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கான ஏர்பேக்கை நிரந்தரமாக வழங்கி வருகிறோம். கடந்த மாதம் முதல் லிவா மற்றும் எட்டியோஸ் கிராஸ் மாடல்களிலும் ஏர்பேக் நிரந்தர ஆக்சஸெரீயாக வழங்குகிறோம்," என தெரிவித்துள்ளார்.
அதுசரி, ப்ராப்பரா எப்படி மோதுறது?

ஏர்பேக் - தகவல்கள்
ஏர்பேக் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
Images Credit: Ajit Menon


Click it and Unblock the Notifications








